பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இதுவரை தம்வசம் துப்பாக்கிகளை வைத்திருக்காத புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது தற்பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில், 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைத்துப்பாக்கிகளை பெற்றுக்கொள்ள புதிதாக விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.
நாட்டில் காணப்படும் சூழ்நிலையை கவனத்தில் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு கைத்துப்பாக்கிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
பாதுகாப்பு அமைச்சே துப்பாக்கிகளை வழங்க வேண்டும்
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் சேவைப்பிரிவில் ஏற்கனவே விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர்.
இந்த விண்ணப்பங்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர், அமைச்சு கைத்துப்பாக்கிகளை வழங்கும்.
கைத்துப்பாக்கிகளை கோரி விண்ணப்பித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் கடந்த காலத்தில் போராட்டகாரர்களின் முக்கிய கவனத்திற்கு உள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அடங்குவதாக பேசப்படுகிறது.
அரசியல்வாதிகள் மீது கடும் அதிருப்தியில் மக்கள்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் மற்றும் கஷ்டங்கள் காரணமாக மக்கள் மத்தியில் அரசியல்வாதிகள் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதனால், மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகலாம் என அரசியல்வாதிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.