மண்முனை மேற்கு பிரதேசத்திற்கு ஸ்ரீநேசன் எம்.பி கள விஜயம்
மட்டக்களப்பு மேற்கு பிரதேசத்திற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் கள விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயத்தினை அவர் நேற்றையதினம்(2) மேற்கொண்டதுடன் அந்தப் பகுதியிலுள்ள குறைபாடுகள் தொடர்பில் அங்குள்ள மக்களிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
இதன்போது மண்முனை மேற்கு பிரதேச சபைக்குச் சென்ற அவர் பிரதேச சபை தவிசாளர் த.கோபலப்பள்ளை, பிரதித் தவிசாளர் த.டிசாந் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோருடன் பிரதேச சபை எல்லைக்குட்படுத்தப்பட்ட கிராமங்கள் தொடர்பாகவும், அப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாகவும் கலந்துரையாடினார்.
கலந்துரையாடல்
எதிர்வரும் வடகீழ் பருவப் பெயற்சி மழை காலங்களில் அப்பகுதியில் ஏற்படும் வெள்ள அனர்த்தம் தொடர்பாகவும், அதற்குரிய முன்னாயத்தங்கள், வடிகான்களைத் துப்பரவு செய்தல், வெள்ளம் ஏற்படும் பகுதியிலுள்ள மக்கள் அங்கிருந்து, இலகுவாக வெளியேறிச் செல்வதற்குகாக வீதிகளுக்கான பெயர் பலகைகளை இடுதல், பிரதேச சபைக்குட்பட்ட எல்லைபுற வீதிகளைப் புனரமைத்தல், உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடியுள்ளார்.

மேலும், இந்தப் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கும் வகையிலான திட்டங்களை சம்மந்தப்பட்ட அமைச்சுக்கும், அரச உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் தாம் கொண்டு செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.