ஆலய திருவிழாவில் கலந்து கொண்ட பெண் ஒருவரின் உறவினர் கோவிட்டால் உயிரிழப்பு
மட்டக்களப்பு - களுவங்கேணி மாரியம்மன் ஆலய திருவிழாவில் கலந்து கொண்ட நிலையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பெண் ஒருவரின் அம்மம்மா கோவிட் தொற்றால் இன்று வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
வந்தாறுமூலை மேற்கு கிராம சேவகர் பிரிவில் மாரியம்மன் ஆலயத்துக்கு அண்மித்த பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவரே கோவிட் தொற்றுக்கு உள்ளாகி வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளார்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை மேற்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள களுவங்கேணி மாரியம்மன் ஆலய திருவிழா கடந்த 5ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
இதில் சுகாதாரத் துறையினரின் சட்டத்தை மீறி அதிகளவான மக்கள் கலந்து கொண்டனர். இவர்களில் 164 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஒரே வீட்டில் தனது பெற்றோர் மற்றும் அம்மம்மாவுடன் வசித்துவரும் பெண் ஒருவர் குறித்த ஆலய விழாவில் கலந்து கொண்ட நிலையில் அவருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டதை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 9 தினங்களாக சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த நிலையில் குறித்த பெண்ணின் அம்மம்மா கோவிட் தொற்று காரணமாக வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளார்.
இவரின் சடலத்தை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கை இடம்பெறுவதுடன், அவர்களுடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.