அன்னை பூபதியின் நினைவிடத்தில் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற பொலிஸார்
இந்திய இராணுவத்தினை வடக்கு, கிழக்கிலிருந்து வெளியேறுமாறு கோரி சாகும் வரையில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 33ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு - கல்லடி, நாவலடியில் உள்ள சமாதியில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று காலை நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராகவும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் கடந்த 1988.03.19ஆம் திகதியிலிருந்து 1988.04.19 வரையில் உண்ணாவிரதமிருந்து அன்னை பூபதி உயிர்நீத்திருந்தார்.
அன்னையர் முன்னணி என்னும் அமைப்பின் ஊடாக இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தியிருந்தார்.
இன்று காலை நடைபெற்ற குறித்த அனுஷ்டிப்பில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை தவிசாளர் சர்வானந்தா, முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா, மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான ஜெயா மற்றும் இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அகவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.
இதேநேரம் குறித்த நிகழ்வு நிறைவடைந்த சந்தர்ப்பத்தில் காத்தான்குடி பொலிஸார் நீதிமன்ற தடையுத்தரவுடன் அப்பகுதிக்கு வருகை தந்த போதும், நிகழ்வு நிறைவடைந்து அங்கு வந்தவர்கள் திரும்பியிருந்ததன் காரணமாக பொலிஸார் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.