இலங்கையில் பல பெண்களுக்கு ஆபத்தாக செயற்பட்ட இளைஞன்! விசாரணையில் சிக்கிய தாய்
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பெண்களின் தங்கச் சங்கிலிகளை அறுத்து கொள்ளையிட்டு வந்த தனது மகனுக்கு உடந்தையாக இருந்த 53 வயதுடைய தாய் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொள்ளையடிக்கப்படும் நகைகளை அடகு வைத்து, அந்தப் பணத்தில் தனது மகனின் போதைப்பொருள் பாவனைக்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
வென்னப்புவ தலைமையக பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 13ஆம் திகதி வடக்கு களுத்துறை பிரதேசத்தில் வைத்து இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
தங்க நகைகள் கொள்ளை
சந்தேகநபரான இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்து, வீதியில் செல்லும் பெண்களின் தங்கச் சங்கிலிகளை அறுத்து கொள்ளையிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அண்மையில் வென்னப்புவ தம்பரவில பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற 18 வயதுடைய பல்கலைக்கழக மாணவி ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுக்க முயன்றபோது, அங்கிருந்த இளைஞர் ஒருவர் அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதன்போது, சந்தேக நபரான இளைஞனிடம் இருந்து 16 கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
விசாரணையில் அவர் ஏற்கனவே சங்கிலி அறுப்பு சம்பவங்களுக்காக விளக்கமறியலில் இருந்து அண்மையிலேயே பிணையில் விடுதலையானவர் என்பது தெரியவந்தது.
பொலிஸார் விசாரணை
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தான் கொள்ளையடிக்கும் தங்கச் சங்கிலிகளைத் தனது தாயிடம் ஒப்படைப்பதாகவும், தாய் அவற்றை அடகு வைத்துப் பெற்றுக்கொள்ளும் பணத்தை அவ்வப்போது தனது போதைப்பொருள் தேவைக்காகத் தருவதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட தாயிடம் நடத்திய விசாரணையில், மகன் கொண்டு வந்து கொடுத்த நகைகளை அடகு வைத்த ஐந்து இடங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.
இவ்வாறு அடகு வைக்கப்பட்ட சுமார் 10 தங்கச் சங்கிலிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
தற்போது தடுப்புக் பொலிஸ் உத்தரவின் கீழ் உள்ள சந்தேகநபரான இளைஞனிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.