ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருக்கும் பெரும்பாலானவர்கள் திருடர்கள் - அசோக அபேசிங்க
ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருக்கும் பெரும்பாலானவர்கள் திருடர்கள் என்பதை தான் பொறுப்புடன் கூறுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க (Ashoka Abeysinghe) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த காலத்தில் உலக சந்தையில் எரிபொருளின் விலைகள் குறைந்தன. 10 டொலர், 5 டொலர் என விலை குறைந்ததுடன் இலவசமாக வழங்குவதாக கூறி அழைத்தனர்.
விலைகள் குறைந்துள்ளதால், உறுதியான எரிபொருள் விலையை ஏற்படுத்த நிதியத்தை ஏற்படுத்தி 20 பில்லியன் ரூபாயை மீதப்படுத்த போவதாக கூறினர்.
அந்த பணம் எங்கே. பணமும் இல்லை ஒன்றும் இல்லை. இறுதியில் எரிபொருளின் விலைகளையும் குறைக்கவில்லை.
உலக சந்தையில் விலை அதிகரிக்கும் போது இலங்கையில் விலைகளை அதிகரிப்பதற்கு எதற்கு அரசாங்கம் என்று அப்போது கூறினர். நினைவில் இருக்கின்றதா?.
தற்போது அதனை பற்றிய பேச்சுக்கள் எங்கே?. உதய கம்மன்பிலவே அதனை கூறியிருந்தார். இவர்கள் கூறுவது அனைத்தும் பொய்.
நாட்டை முன்னேற்ற முதலில் திருடர்களை ஒழிக்க வேண்டும். திருடும் வரை இந்த நாட்டை முன்னேற்ற முடியாது.
நான் பொறுப்புடன் கூறுகிறேன். ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருக்கும் பெரும்பாலானவர்கள் திருடர்கள்.
கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள். நேனோ நைட்ரஜனிலும் அண்மையில் 300 கோடி ரூபாய் கொள்ளையிட்டுள்ளனர். இது என்ன வேலை?.
மக்கள் தினமும் பயன்படுத்தும் சீனியிலும் கொள்ளையிட்டனர். அரிசியிலும் கொள்ளையிட்டனர். தற்போது ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளனர்.
இந்த தொகை எவ்வளவு காலத்திற்கு போதுமானது?. தினமும் 6 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் அரிசி தேவைப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசி 15 நாட்களுக்கே போதுமானது.
இந்த அரிசி சேதனப் பசளையில் விளைவிக்கப்பட்ட அரிசியா?. இவர்களுக்கு எமது சிறு நீரகங்கள் மீது புதுமையான அன்பு ஏற்பட்டுள்ளது எனவும் அசோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.