ரணில் அரசாங்கத்தில் இன்று பதவியேற்கவுள்ள அமைச்சர்கள்!
புதிய அரசாங்கத்தின் மேலும் சில அமைச்சரவை அமைச்சர்கள் இன்று மாலை பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தமக்குரிய அமைச்சுக்கள் தவிர்ந்த 18 அமைச்சுக்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் ஒதுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிகமாக 30 ராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர். ஏற்கனவே நான்கு அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
இந்தநிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு 18 அமைச்சுக்களில் 10 அமைச்சுகளும், 8 அமைச்சுக்கள் ஏனைய கட்சிகளுக்கும் ஒதுக்கப்படவுள்ளன.
நீதித்துறை மற்றும் விவசாயம் போன்ற துறைகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு செல்கின்றன. புதிய அரசாங்கத்தில் பிரதமர் நிதி அமைச்சராகவும் செயல்படவுள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற துணை சபாநாயகராக பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.
அது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அல்லது ஐக்கிய மக்கள் சக்தியின் ரோகினி கவிரத்னவாக இருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.