அமைச்சரவையில் மேலும் சில அமைச்சர்கள்! இன்று சத்தியபிரமாணம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் மேலும் 10 அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.
நிமல் சிறிபால டி சில்வா, டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த அமரவீர, சுசில் பிரேம ஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா, விஜயதாச ராஜபக்ச, டிரான் அலஸ், ஜீவன் தொண்டமான், ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரே இன்று அமைச்சர்களாகச் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வாவும், விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீரவும், கல்வி அமைச்சராக சுசில் பிரேம ஜயந்தவும், நீதி அமைச்சராக விஜயதாஸ ராஜபக்சவும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக டிரான் அலஸும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி, பிரதமர் உட்பட 25 உறுப்பினர்களுக்கு அமைச்சரவை வரையறுக்கப்பட்டுள்ளது, அவர்களில் நான்கு பேர் ஏற்கனவே பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
அதேவேளை, 25 இராஜாங்க அமைச்சர்கள் பின்னர் நியமனம் பெறுவார்கள் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் மேலும் சில புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நான்கு அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இந்தநிலையில் இன்று காலை மேலும் சில புதிய அமைச்சர்கள் சத்தியபிரமாணம் செய்து கொள்வர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சுப் பொறுப்புக்கள் தொடர்பில் நேற்று நாடாளுமன்றில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க கேள்வி எழுப்பியிருந்தார்.
அதேநேரம் ஏற்கனவே 15 ஆக கூறப்பட்டிருந்த அமைச்சர்களின் எண்ணிக்கை தற்போது, சிலரை திருப்திப்படுத்தும் வகையில், 22 ஆக உயரவிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.