பரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றோருக்கு பெருந்தொகை பணப்பரிசு
பரா ஒலிம்பிக் போட்டித் தொடரில் பதக்கங்களை வென்ற, திறமைகளை வெளிப்படுத்திய வீர வீராங்கனைகளுக்கும், பயிற்றுவிப்பாளர்களுக்கும் பெருந்தொகை பணப்பரிசு வழங்கப்பட உள்ளது.
வீர வீராங்கனைகளுக்கும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் சுமார் 106 மில்லியன் ரூபா பணப்பரிசு வழங்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டித் தொடரில் இலங்கையின் சார்பில் பதக்கங்களை வென்ற வீர வீராங்கனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தப் பணப்பரிசில்கள் வழங்கப்பட உள்ளன.
இது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரமொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ளதுடன் அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பரா ஒலிம்பிக் போட்டித் தொடரில் இலங்கை இரண்டு பதக்கங்களை வென்றிருந்தது. ஈட்டி எறிதல் போட்டியில் தினேஷ் பிரியந்த தங்கப் பதக்கம் வென்றதுடன், மற்றுமொரு பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில் சமித்த துலா கொடிதுவக்கு வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
தங்கப் பதக்கம் வென்ற வீரருக்கு 50 மில்லியன் ரூபா வழங்கப்பட உள்ளது. வெண்கலப் பதக்கம் வென்ற வீரருக்கு 20 மில்லியன் ரூபா வழங்கப்பட உள்ளது.
4ம் இடம் முதல் 8ம் இடம் வரையில் பெற்றுக் கொண்டவர்களுக்கு தலா 2.5 மில்லியன் ரூபா வழங்கப்பட உள்ளது. 9 முதல் 16ம் இடம் வரையில் பெற்றுக் கொண்டவர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபா வழங்கப்பட உள்ளது.
உலக சாதனைக்காக பத்து மில்லியன் ரூபா வழங்கப்பட உள்ளதுடன், பயிற்றுவிப்பாளர்களுக்கு 19.125 மில்லியன் ரூபா பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.
இதற்கு மேலதிகமாக தங்கப் பதக்கம் வென்ற தினேஷிற்கு 10 மில்லியன் ரூபாவும் வெண்கலம் வென்ற துலானுக்கு ஒரு மில்லியன் ரூபாவும் பணப் பரிசில்களை வழங்க ஶ்ரீலங்கா கிரிக்கட் தீர்மானித்துள்ளது.
இதன்படி ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனையுடன் தங்கம் வென்ற தினேஷிற்கு சுமார் 70 மில்லியன் ரூபா பணப் பரிசு கிடைக்கப் பெறவுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீர வீராங்கனைகள் இன்று நாடு திரும்ப உள்ளமை குறிப்பிடத்தக்கது.