யாழில் சமுர்த்தி உத்தியோகத்தர் என கூறி பண மோசடி! மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்
சமுர்த்தி உத்தியோகத்தர் என கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடமாடுவதாகவும் மக்களை அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமுர்த்தி கொடுப்பனவு பெறும் முதியோர்களையும், அரசினால் வழங்கப்படும் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவினை பெறும் முதியவர்களையும் இலக்கு வைத்து ஒரு குழு பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றது.
மோசடியாளரின் யுக்தி
புதிதாக வந்த சமுர்த்தி உத்தியோகத்தர் என தம்மை அறிமுகப்படுத்தி 20,000 ரூபாய் எம்மிடம் தந்தால் மாதாந்தம் ஒரு தொகை கொடுப்பனவு வழங்குவோம் என கூறி முதியவர்களிடம் பணம் பறித்து செல்லும் சம்பவங்கள் உடுவில் கோப்பாய் வேலணை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அண்மை நாட்களில் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் வயோதிப பெண் ஒருவரிடம் 19ஆயிரம் ரூபா பெற்றுச்சென்றுள்ளதாக அந்த பெண் கிராம சேவகரிடம் முறைப்பாடு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
மேற்படி சம்பவம் இடம் பெற்றிருந்த நிலையில் குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சரவணை பகுதியில் (NP- HX-3125) இலக்க மோட்டார் சைக்கிளில் நடமாடுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிளில் சென்று நல்லூர் பகுதியில் ஏற்கனவே ஒருவர் மோசடி செய்திருந்த நிலையில் அந்த மோட்டார் சைக்கிள் ஏழாலை பகுதியைச் சேர்ந்தவருடையது என அடையாளம் காணப்பட்டது.
கைதுசெய்வதற்கான நடவடிக்கை ஆரம்பம்
விசாரணைகளின் போது குறித்த நபர் மோட்டார் சைக்கிளை தான் விற்பனை செய்ததற்கான ஆவணத்தை காண்பித்ததாக ஊர்காவற்துறை பிரதேச செயலகர் திருமதி மஞ்சுளாதேவி தெரிவித்தார்.
எனவே குறித்த நபர் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு குறித்த நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
எனவே பொதுமக்கள் குறித்த விடயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஊர்காவற்
துறை பிரதேச செயலக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
