நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணமோசடி வழக்கு: சட்டமா அதிபருக்கு நினைவூட்டல்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சட்ட ஆலோசனையை விரைவுபடுத்துமாறு, கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு நினைவூட்டலை அனுப்பியுள்ளது.
நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமானதாகக் கருதப்படும் நிறுவனத்தில் 15 மில்லியன் ரூபாய் பணமோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், நாமல் ராஜபக்ச மற்றும் நான்கு பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு தொடர்பான சட்ட ஆலோசனையை விரைவுபடுத்துமாறே நேற்றையதினம்(13.02.2025) நினைவூட்டல் அனுப்பப்பட்டுள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் துறையினர், சந்தேக நபர்களுக்கு எதிரான எதிர்கால சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
இதனையடுத்து, குறித்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை ஒகஸ்ட் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில், நாமல் ராஜபக்ச, சுதர்சன பண்டார கணேவத்த, நித்யா சேனானி, சுஜானி போகொல்லாகம மற்றும் இந்திக பிரபாத் கருணாஜீவ ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டனர்.
முன்னதாக, இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்திய நிதி மோசடி விசாரணைப் பிரிவு, நாமல் ராஜபக்ச 45 மில்லியன் ரூபாய் அளவுக்கு பணமோசடியில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)