கிளிநொச்சியில் வீடொன்றிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய கும்பல்
கிளிநொச்சி - பரந்தன்,சிவபுரம் பகுதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் இன்று 25க்கும் மேற்பட்ட கும்பல் வீடொன்றுக்குள் புகுந்து வீட்டில் இருந்த குடும்பப் பெண் மற்றும் குழந்தைகள் ஆகியோர் மீது கோடாலி மற்றும் கொட்டன் என்பவற்றால் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது குறித்த கும்பல் வீட்டிலிருந்த பொருட்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளதுடன், வீட்டுக்குள் புகுந்த கும்பல் மீது குறித்த வீட்டின் உரிமையாளர் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
இன்று பகல் பரந்தன் சிவபுரம் பகுதியில் 25க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்றாக திரண்டு குறித்த வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த சிறிய குழந்தைகள் மற்றும் குடும்ப பெண் ஆகியோர் மீது கொட்டன் மற்றும் கற்களால் தாக்கியுள்ளதுடன் வீட்டு பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை,அந்த குழுவினரால் கோடாலியால் வீட்டின் கதவை உடைக்க முற்பட்ட சமயம் வீட்டின் உரிமையாளர் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது .
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டவர்களே இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஊரடங்கு சட்டத்தின் போது பரந்தன் பகுதியில் 13 வீடுகளுக்குள் புகுந்து இரவு நேரங்களில் தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களே இச்சம்பவத்தையும் மேற்கொண்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
