ஜெனிவா கூட்டத் தொடரில் எம்மை பயன்படுத்த திட்டம்! - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்
மார்ச் மாதம் நடைபெற உள்ள ஜெனிவா கூட்டத் தொடருக்கு தங்களுடைய அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு நடமாடும் சேவைகள் மூலம் எம்மை பயன்படுத்த பாக்கின்றனர் என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நீதி அமைச்சினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளது குறிப்பாக இந்த நீதி அமைச்சினால் நடாத்தப்படும் நடமாடும் சேவையில் பல்வேறு திட்டங்கள் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஒன்று திரட்டும் ஒரு திட்டம் இங்கே முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த திட்டத்தில் குறிப்பாக ஓ எம் பி அலுவலகத்தில் பதவியில் இருந்தவர்கள் அதனூடாக செய்யமுடியாததை இங்கே வந்து இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உடைய விடயத்தை பல்வேறு வழிகளிலும் முயன்று முடியாமல் போன விடயத்தை இவ்வாறான ஒரு வகையிலே சாதிப்பதற்காக முனைகின்றனர்.
இவர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு வருகை தருவதாக அறிந்திருக்கின்றோம் இவர்களுடைய இந்த நடமாடும் சேவையானது மார்ச் மாதம் நடைபெற உள்ள ஜெனிவா கூட்டத் தொடருக்கு தங்களுடைய அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு நாங்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உடன் கலந்துரையாடி உள்ளதாகவும் அவர்கள் தங்களுடைய செயற்பாடுகளுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிப்பதற்காகவே இவர்கள் இவ்வாறான ஒரு செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.
இந்த நடமாடும் சேவையில் இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உடைய விடயம் தொடர்பான விடயங்களை நாங்கள் வன்மையாக கண்டித்து இதனைப் புறக்கணித்து நிற்கின்றோம்.
அவர்கள் வேறு விடயங்கள் தொடர்பில் கதைப்பதால் எங்களுக்கு ஆட்சேபனையில்லை ஆனால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடைய உறவினர்கள் உடைய விடயத்தை கையாண்டு எங்களுடைய உறவுகளை சிதைத்து சின்னாபின்னமாக்குவதற்காக செய்யப்படுகின்ற ஒரு வேலையாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
எத்தனையோ ஆணைக்குழுக்கள் இடம் சென்று 12 வருடமாக கண்ட கனவுகளும் கற்பனைகளும் ஏராளம் ஆனால் இந்த கற்பனை கனவுகள் அனைத்தையும் உடைத்து மீண்டும் ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
நமது உறவுகளுக்கு தாங்கள் நட்டஈடு வழங்குவதாகவும் இவர்களுடைய இந்த பிரச்சினையை மிக விரைவில் முடிவுக்கு கொண்டு வர உள்ளதாகவும் காட்ட முனைகிறார்கள்.
கடந்த 12 வருடமாக எடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு தீர்வு இல்லை இவ்வாறு பதிவுகளை மேற்கொண்டவர்களுக்கான உரிய பதில்களை வழங்குவதை விடுத்து மீண்டும் வருகை தந்து இவ்வாறு இரகசியமான முறையிலேயே பதிவுகளை மேற்கொண்டு எங்களுடைய உறவுகளை பிரித்து கையாள்வதற்கு முயல்கின்றார்கள்.
ஆகவே இந்த விடயத்தில் நாங்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம் இந்த அரசாங்கத்திடம் தீர்வை எதிர்பாத்து நாங்கள் இந்த போராட்டத்தை செய்யவில்லை இந்த அரசாங்கத்திடம் நாங்கள் பல தடவைகள் சென்று எந்த ஒரு தீர்வும் கிடைக்காத நிலையிலேயே சர்வதேச விசாரணை கோரி நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
எங்களுடைய இந்த போராட்டத்தை தடை செய்து இந்த உறவுகள் போராட முடியாத வகையில் அச்சுறுத்தல்களையும் விடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் நாங்கள் இந்த அரசாங்கத்திடம் எந்த ஒரு நீதியை எதிர்பார்த்து நாங்கள் இந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கவில்லை. நாங்கள் தனித்தனியாக எங்களுடைய உறவுகளை தேடிக் கொண்டிருக்கின்றோம்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் குறிப்பாக வட மாகாணத்தில் வந்து எங்களுடைய தமிழ் உறவுகளை பயன்படுத்திக் கொண்டு ஒரு நோக்கோடு இந்த நடமாடும் சேவையை இவர்கள் செய்கின்றார்கள் இந்த அரசாங்கம் எமக்கான தீர்வைப் வழங்கப்போவதில்லை.
இவ்வாறான செயற்பாடுகளை நாம் புறக்கணிக்க வேண்டும் என அனைத்து உறவுகளிடமும் கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறான ஏமாற்று வேலைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்பதை கேட்டுக்கொள்கின்றேன் எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.