அமைச்சு பதவிகளை ஏற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு நாம் அழைப்பு விடுக்கவில்லை! அரசாங்கம் அறிவிப்பு
அமைச்சு பதவிகளை ஏற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு நாம் அழைப்பு விடுக்கவில்லை. மாறாக ஏனைய வழிகளில் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்குமாறே கோருகின்றோம் என ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று (29.04.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாம் அழைப்பு விடுக்கவில்லை
இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,“எதிர்க்கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தில் அரசியல் நோக்கத்திற்காக மாத்திரம் செயற்படுவதா அல்லது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு உதவுவதா என்று சிந்திக்க வேண்டும்.
இதற்கான பகிரங்க அழைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த ஆண்டு ஜூலை 25ஆம் திகதி முதல் விடுக்கப்பட்டது. அமைச்சு பதவிகளை ஏற்குமாறு நாம் கூறவில்லை. மாறான வேறு பல வழிகளிலும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பினை வழங்க முடியும்.
சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என்பதை எதிர்க்கட்சி தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தது.
இவ்வாறான ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் போது, ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் வரை அதனை எம்மால் வெளிப்படுத்த முடியாது.
வரி அதிகரிப்பு
எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்ட பின்னரே அரசாங்கம் என்ற ரீதியில் எம்மால் அதனை நாட்டுக்கு வெளிப்படுத்த முடியும். எனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக இது தொடர்பில் தெரிவித்திருக்கின்றார்.
அவ்வாறான சந்தர்ப்பங்களின் போது வரி அதிகரிப்பு தொடர்பிலும் அவர் நாடாளுமன்றத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக வரி அதிகரிக்கப்படுவது சாதாரண விடயமாகும். எனினும் தற்போது நாம் எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அதன் வீதத்தை அதிகரிக்க வேண்டியேற்பட்டுள்ளது.”என தெரிவித்துள்ளார். .

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
