எவ்வித அர்த்தங்களும் இன்றி அமைச்சுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன: கடுமையாக சாடும் தேரர்
அமைச்சுக்கள் எவருக்கு எந்த தீர்மானங்களையும் எடுக்க முடியாத வகையில் பிரிக்கப்பட்டுள்ளதால், அவற்றை முதலில் ஒழுங்குப்படுத்தி விஞ்ஞான ரீதியில் பிரிக்க வேண்டியது காலத்தின் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் (Athuraliye Rathana thero) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது அரசாங்கத்தின் பிரச்சினைகளுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
மின் சக்தி மற்றும் எரி சக்தி அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கமத்தொழில் அமைச்சு ஓரிடத்தில், பெருந்தோட்டத்துறை அமைச்சு வேறோரிடத்தில். மகாவலி அமைச்சு இன்னுமோர் இடத்தில். பசளை வேறிடத்தில். அமைச்சர் மேலும் ஒரு இடத்தில்.
கடந்த அரசாங்கமும் இப்படியே அமைச்சுக்களை பகிர்ந்தது. இப்படி செயற்படும் போது சரியான தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்துவது எப்படி என்ற பாரதூரமான பிரச்சினை ஏற்படுகிறது.
அதேவேளை சமையல் எரிவாயு கொள்கலன் வெடிப்பது சம்பந்தமான விடயத்தில் உடனடியாக தீர்வு அவசியம் எனவும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.