தேரரை தாக்கியவர்களை ஏன் கைது செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் விமலவீர காட்டம்
போராட்டத்தில் பங்கேற்பதற்கு சென்றவர்களுக்கு அறிவுரை கூறியதன் பின்விளைவே தேரர் மீதான தாக்குதலாகும் என முன்னாள் வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விமலவீர திசாநாயக்க விசனம் தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (16.07.2023) நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் மத்தியில் கேள்வி எழுகின்றது.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தாக்குதல் மேற்கொண்டவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். இத்தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எதுவும் எடுக்காமல் பொலிஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். இதனால் எமது நாட்டின் சட்டம் எங்கே செல்கின்றது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது .
கடந்த ஜுலை 10 ஆந் திகதி மாலை 7 மணியளவில் அம்பாறை மாவட்டம் தமண பிரதேச செயலகத்திற்குட்பட்ட பௌத்த விகாரை ஒன்றின் தேரர் ஒருவர் சிலரால் தாக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தேரர் மீது ஐவர் கொண்ட குழுதாக்குதல் மேற்கொண்டிருந்ததாக அறிய முடிகின்றது. தற்போது தாக்குதல் இடம்பெற்று 6 நாட்கள் கடந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பொலிஸாரால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேரரை தாக்கியவர்கள் என கூறப்படுபவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.
இவர்களுக்கு அரசியல் பலம் உள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தேரர் அப்பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த போராட்டத்தில் பங்கேற்பதற்கு சென்றவர்களுக்கு அறிவுரை கூறியதன் பின்விளைவே தாக்குதலுக்கு காரணமாக அமைந்திருக்கின்றது.
பொலிஸார் இவ்விடயத்தில் அமைதியாக உள்ளனர். இதில் பொலிஸ் பொறுப்பதிகாரி பொறுப்பு கூற வேண்டியவர். இவர் பக்கச்சார்பாக நடந்துக்கொள்வதாகவே மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயத்தை சாதாரணமாக கடந்துவிட முடியாது.
தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் 2 பேரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக பிந்திய தகவல் கிடைத்தது. ஆனால் இந்த தாக்குதல் விடயத்தில் பக்கச்சார்பாக பொலிஸார் நடப்பதென்பது ஏற்கமுடியாத விடயமாகும்.
இவ்விடயத்தை சாதாரணமாக கடந்துவிட முடியாது. மக்கள் போராட்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவே இவ்விடயத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |