ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்கு ஆதரவு வழங்கும் அமைச்சர்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு(Ranjan Ramanayakke) ஜனாதிபதியின் மன்னிப்பை பெற்றுக்கொள்ளும் போராட்டத்திற்கு முதல் முறையாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரின் ஆதரவு கிடைத்துள்ளது.
ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும(Dullas Alagaperuma), ரஞ்சனின் விடுதலைக்கான ஆதரவை முன்வைத்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஒரு தண்டனை வழங்கப்படவில்லை. இரண்டு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தை அவமதித்தைக்கு ஒரு தண்டனை, ஒன்றரை லட்சம் மக்கள் விரும்பி தெரிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்தமை இரண்டாவது தண்டனை.
இரண்டு தண்டனைகள் வழங்கப்படுவது ஒரு பிரஜைக்கு வழங்கப்படும் பாரதூரமான தண்டனைகள் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
ஜனாதிபதியோ, அரசாங்கமோ ரஞ்சன் ராமநாயக்க வைராக்கியத்துடனும் கோபத்துடனும் பார்க்கவில்லை. இது குறித்து சாதகமாக சிந்திக்க வேண்டும் எனவும் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவைப் பேச்சாளர்களில் ஒருவரான அமைச்சர் டளஸ், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக அங்குகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த சிறைத்தண்டனையை காரணமக கொண்டு அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது.