இந்தியப் பிரதமர் மோடிக்கு நாமல் கொடுத்த பரிசு!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இலங்கையின் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்சவால் பகவத்கீதை வெளியீட்டின் முதற் பிரதியை பரிசாக வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் நாமலின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கெளதம புத்தர் பரிநிர்வாணமடைந்த உத்திர பிரதேசத்தில் உள்ள குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று( 20 ) திறந்து வைத்துள்ளார்.
இந்த விமான நிலையம் பெளத்த மதத்தவரது ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தின் துவக்க விழாவானது இலங்கையின் கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 100 இற்கு மேற்பட்ட ப பௌத்த துறவிகள் மற்றும் 12 முக்கிய பிரமுகர்களுடன் புத்தரின் புனித நினைவுச்சின்னங்களைக் கொண்டு சென்ற விமானம் .தரையிறங்கியதன் மூலம் ஆரம்பமாகியது.
புராதன நகரமான குஷிநகர் கெளதம புத்தரின் இறுதி ஓய்வு இடமாகும், அங்கு அவர் இறந்த பிறகு மஹாபரிநிர்வாணம் அடைந்தார்.
இந்த நிகழ்வின் விசேட அம்சமாக, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே 2500 வருடங்களாகக் காணப்படும் நட்புறவின் அடையாளமாக, பாரத தேசம் இந்த உலகிற்குத் தந்த மிகப் புனிதமான நூலான பகவத்கீதை வெளியீட்டின் முதற் பிரதி, இலங்கையின் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்சவால்(Namal Rajapaksa) இந்தியப் பிரதமர் மோடிக்கு(Narendra Modi) வழங்கப்பட்டு வெளியீடு செய்து வைக்கப்பட்டுள்ளது.
அது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பரஸ்பர உறவை மேலும் வளர்க்கும் செயலாகும்.
இலங்கைத் திருநாட்டின் பிரதமர், மகிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksa) அறிவுறுத்தலுக்கு அமைவாக, புத்த சாசன சமய, மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் இந்து சமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தால் பகவத்கீதை என்னும் இந்நூல் பதிப்பிக்கப்பட்டது.
பாரத தேசம் இந்த உலகிற்குத் தந்த மிகப் புனிதமான நூல் பகவத்கீதை. இலங்கையில் வாழ்கின்ற இந்துக்கள் மட்டுமல்லாது, சகல மதத்தவர்களும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டதே இந்த நூல் ஆகும்.
இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற அனைத்து மதத்தவர்களும் அறியும் வகையில்
பகவத்கீதையில் அமைந்த சமஸ்கிருத சுலோகங்களை, சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய
மும்மொழிகளிலும் அறியும் வண்ணம் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.