யாழில் நினைவுச் சின்னம் உடைக்கப்பட்டமையை நியாயப்படுத்தும் தென்னிலங்கை அமைச்சர்
பல்கலைக்கழத்தில் எது இருக்க வேண்டும்? எது இருக்கக்கூடாது? என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு உண்டென அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இந்த விடயத்தை எவரும் சவாலுக்குட்படுத்த முடியாது. அந்தவகையில் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி யாழ். பல்கலைக்கழத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த போர்க்காலச் சின்னமான நினைவுத்தூபியை துணைவேந்தர் அகற்றியுள்ளார்."
போர்க்காலச் சின்னங்கள் பல்கலைக்கழகத்தில் எதற்காக நிறுவப்பட வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
"யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவுத்தூபி உடைக்கப்பட்ட விவகாரத்தைத் தமிழ்க் கட்சியினர் தமது சுயலாப அரசியல் பிரசாரத்துக்குப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதற்கு மாணவர்கள் எவரும் துணைபோகக்கூடாது என்பதே எமது வேண்டுகோளாகும்.
பல்கலைக்கழகம் ஒரு கல்விக்கூடம். சகல இனத்தைச் சேர்ந்த மாணவர்களும் ஒற்றுமையாகக் கற்கும் இடம். அங்கு அரசியலுக்கு இடமில்லை. யாழ். பல்கலைக்கழகம் ஒரு காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இயங்கியது. கடந்த அரசின் காலத்திலும் அந்த எண்ணத்தில் சில மாணவர்கள் அங்கு செயற்பட்டார்கள்.
பல்கலைக்கழக வளாகத்தில் வைத்துப் விடுதலைப்புலிகளைப் பகிரங்கமாக நினைவேந்தினார்கள்.
அந்தக் காலம் மாதிரி இப்போதைய காலத்தை மாணவர்களும், தமிழ் அரசியல்வாதிகளும் எடைபோடுவது தவறானதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.