கடலுணவு ஏற்றுமதியாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் விசேட சந்திப்பு(Photo)
“நாடளாவிய ரீதியில் தொழில் முறைகளை பயன்படுத்துகின்ற கடற்றொழிலாளர்கள் எரிபொருள் பிரச்சினைகளை
எதிர்கொள்ளுகின்ற நிலையில், அனைவரையும் கருத்தில் கொண்டு எரிபொருள்
பிரச்சினையை தீர்ப்பதற்கான மாற்று பொறிமுறைகளை ஆராய வேண்டும்” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் நெருக்கடிகளை தீர்க்கும் நோக்கிலான கலந்துரையாடல், கடலுணவு ஏற்றுமதியாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இன்று(8) நடைபெற்றுள்ளது.
விசேட சந்திப்பு
இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், “நாட்டில் இருக்கின்ற அனைத்து மீன்பிடிக் கலன்களும் தங்குதடையற்ற முறையில் தொடர்ச்சியாக தொழிலில் ஈடுபடுவதை உறுதிப்படுத்த வேண்டும். அதன் மூலம் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாப்பது மாத்திரமல்லாமல், பொருளாதார நெருக்கடிளில் இருந்து நாட்டை மீட்பதற்கான பங்களிப்பினையும் வழங்க முடியும்.
குறிப்பாக எரிபொருளுக்கு தேவையான டொலர்களை பெற்றுக்கொள்வற்கான ஏற்பாடுகள் கடலுணவு ஏற்றுமதியாளர்களினால் ஒழுங்குபடுத்தப்படுமானால் சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கின்றோம்" என்று தெரிவித்தார்.
மேலும், குறித்த எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பான ஏற்றமதியாளர்களின் ஆலோசனைகளை எழுத்து மூலம் வழங்குமாறு ஏற்றுமதியாளர்களை கேட்டுக்கொண்ட அமைச்சர், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்” எனவும் தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
இந்த கலந்துரையாடலின் போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதற்கமைய, இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்திற்கு தேவையான எரிபொருளை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றன.
இதனால் ஆயிரக்கணக்கான படகுகள் தொழிலுக்கு போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, நீர் வேளாண்மை உற்பத்தியில் ஈடுபடுகின்ற பண்ணையாளர்கள்
எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சினை தொடர்பாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.




