மகன் கைது! - பதவியை இராஜினாமா செய்தார் அருந்திக பெர்னாண்டோ
இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ராகம மருத்துவ பீடத்தின் ஆண்கள் விடுதிக்குள் நேற்று (02) காலை புகுந்த சிலர் அங்கிருந்த மாணவர்களை தாக்கியுள்ளனர். மூன்று மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காரையும் மாணவர்கள் கைப்பற்றி சந்தேக நபர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் நேற்றிரவு பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 வயதான அவிந்த ரந்தில ஜெஹான் பெர்னாண்டோ என்ற சந்தேக நபர் நேற்று (02) இரவு சட்டத்தரணி ஊடாக ராகம பொலிஸாரிடம் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட BMW காரும் களுபோவில பகுதியில் வைத்து ராகம பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி, சம்பவம் தொடர்பில் மொத்தம் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமைச்சரின் மகன் உட்பட சந்தேகநபர்கள் 6 பேர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்பிற்காக வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இவ்வாற பின்னணியிலேயே, இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக அருந்திக பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.