ஐரோப்பாவில் பல லட்சம் பேர் உயிரிழக்கும் ஆபத்து! - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ஐரோப்பாவில் கோவிட் தொற்று வேகமாக பரவும் நிலையில், அடுத்த ஆண்டு வசந்த காலத்துக்கு முன் (மார்ச்-ஜூன்) சுமார் 7 லட்சம் பேர் வரை உயிரிழக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பலி எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்து விடும் எனவும் உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய கிளை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய பகுதிகளில் கொரோனா மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. நாளொன்றுக்கு சுமார் 4,200 பேர் வரை கோவிட் தொற்றினால் உயிரிழந்து வருகின்றனர்.
இது கடந்த செப்டம்பர் இறுதி நிலையை ஒப்பிடுகையில் இது இருமடங்கு ஆகும்.
இதுகுறித்து அந்த அமைப்பின் பிராந்திய இயக்குனர் டாக்டர் க்ளூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா பகுதிகளில் கொரோனாவின் இன்றைய நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது.
எனவே நோய் எதிர்ப்பு திறன் குறைந்தவர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகுந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போட வேண்டும்” எனவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
இதேவேளை, இங்கிலாந்தில் அதிகரித்து வரும் டெல்டா வகை கோவிட் பரவலால் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,484 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 99,32,408 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 165 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 44 ஆயிரத்து 137 ஆக உயர்ந்துள்ளது.
இங்கிலாந்தில் கோவிட் பாதிப்பில் இருந்து இதுவரை 87 லட்சத்து 91 ஆயிரத்து 315 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கோவிட் பாதிப்புடன் 9,96,956 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.