இலங்கைக்கு உதவும் அமெரிக்கா! டொலர்கள் வழங்க முடிவு - ஜோ பைடன் அறிவிப்பு
இலங்கையில் உணவு பாதுகாப்பை வலுப்படுத்த 20 மில்லியன் டொலர் கூடுதல் உதவியை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
ஜேர்மனியில் இன்று(28) நடைபெற்ற G7 உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட போதே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு அறிவித்துள்ளார்.
அறிவிப்பு
அமெரிக்காவின் பிற சமீபத்திய நிதி அறிவிப்புகளின் அடிப்படையில், இலங்கைக்கான இந்த உதவி திட்டம் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த உதவி திட்டம் அடுத்த 15 மாதங்களில் 800,000 க்கும் மேற்பட்ட இலங்கை குழந்தைகளுக்கு உணவளித்தல், 27,000 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு உணவு வவுச்சர்களை வழங்குதல், பாடசாலை ஊட்டச்சத்து திட்டத்திற்கு ஆதரவளித்தல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
20 மில்லியன் டொலர்
இதேவேளை பாதிக்கப்படக்கூடிய இலங்கை சமூகங்களில் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காக, விவசாய உதவிகள் மற்றும் பணத்தின் பங்களிப்பு மூலம் சுமார் 30,000 விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் இந்த உதவி திட்டம் முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Today, @POTUS announced $20 million in additional assistance to SL. This aid will feed Sri Lankan children, combat food insecurity and demonstrates our enduring commitment to the health & well-being of the Sri Lankan people.https://t.co/wYJmawQGGE
— Ambassador Julie Chung (@USAmbSL) June 28, 2022
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், "இலங்கைக்கு 20 மில்லியன் டொலர் கூடுதல் உதவி வழங்குவதாக அறிவித்திருப்பது, உணவு பாதுகாப்பு, பொது சுகாதாரம் மற்றும் அனைத்து இலங்கை மக்களின் பொருளாதார நல்வாழ்வுக்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது" என கூறியுள்ளார்.