பால்மா விலை அதிகரிக்கப்படுகிறதா? நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் தகவல்
ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபா வரை அதிகரிப்பது தொடர்பில் கொள்கையளவில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண (Lasantha Alagiyawanna) தெரிவித்துள்ளார்.
இருந்த போதும் பால்மாவுக்கான விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகாரசபை இதுவரை அனுமதி வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான விலையை அதிகரிப்பதற்கு இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.
ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபா வரை அதிகரிப்பது தொடர்பில் வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவிலேயே தீர்மானிக்கப்படும்.
உலக சந்தையில் பால்மா விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து, இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதிக்குமாறு பால்மா இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் கடந்த ஒரு மாத காலமாக கோரி வருகின்றன.
விலை அதிகரிக்க அனுமதிக்கப்படாதமையால் அவர்கள் தற்போது இறக்குமதியை மட்டுப்படுத்தி இருக்கின்றனர். அதனால் சந்தையில் கடந்த சில வாரங்களாக பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது.
இந்த பின்னணியில் பால்மா இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் (Basil Rajapaksa) இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது உலக சந்தையில் பால்மா விலை அதிகரிக்கப்பட்டிருப்பது, கப்பல் கட்டணம் அதிகரித்திருப்பது, ரூபாவுடன் ஒப்பிடுகையில் டொலரின் பெறுமதி அதிகரித்திருப்பது போன்ற காரணங்களுக்கமைய ஒரு கிலோகிராம் பால்வின் விலையை 350 ரூபா வரை அதிகரிப்பதற்கு அனுமதி கோரியுள்ளனர்.
என்றாலும் சந்தை நிலைமை மற்றும் இறக்குமதி வரி தொடர்பில் நீண்ட கலந்துரையாடலின் பின் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபா வரை அதிகரிப்பது தொடர்பில் கொள்கையளவில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இருந்தபோதும் பால்மாவுக்கான விலை அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகாரசபை இதுவரை அனுமதி வழங்கவில்லை.
எதிர்வரும் வாரத்தில் வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு இது தொடர்பாக கலந்துரையாடிய பின்னரே விலை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி...
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பு