இலங்கையில் வைத்து இந்திய இராணுவ தளபதி வெளியிட்டுள்ள அறிவித்தல்!
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர இராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகள் எதிர்காலத்திலும் தொடரும் என்று இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே இலங்கையில் வைத்து உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே இன்று இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசியவர்,
முதிர்ச்சியடைந்த இரண்டு ஜனநாயக நாடுகளில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையே நிலவும் சிறந்த உறவுக்கு நிகரான உறவு இரு நாட்டு இராணுவங்களுக்கு இடையிலும் காணப்படுகிறது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மகத்தான வரவேற்பை வழங்கியிருந்தார். தற்போதைய எனது பதவி நிலையில் இலங்கைக்கு வரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இலங்கை இராணுவத்துடன் எனக்கு மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இலங்கை இந்திய இராணுவங்களிடையே மிக நெருக்கமான பரஸ்பர இரணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் காணப்படும் நிலையில், எதிர்க்காலத்திலும் அது தொடரும். அதன் ஒரு அங்கமாக தற்போதும் அம்பாறை மற்றும் மாதுரு ஓயாவில் இடம்பெறும் ' மித்ர சக்தி' கூட்டு பயிற்சிகள் நடைபெறுகின்றன. அப்பயிற்சிகள் தொடர்பிலான இறுதிக் கட்ட நிகழ்வுகளிலும் பங்கேற்க எதிர்ப்பார்க்கிறேன்.
இதேவேளை, இலங்கை இராணுவம் உள்ளிட்ட முப்படையினரும், ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் கோவிட் 19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மிக வெற்றிகரமாக முன்னெடுத்துவருகின்றனர்.
ஐந்து நாட்கள் விஜயமாக இந்திய இராணுவ தளபதி இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.