வரலாற்றில் முதல்முறையாக Meta - YouTube குற்றவாளிகள் என அறிவிப்பு.. அமெரிக்க நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெற்ற முக்கியமான வழக்கில், சமூக ஊடக அடிமைத்தனம் காரணமாக தனது மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறிய இளம் பெண்ணுக்கு நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
சமூக வலைதளப் பயன்பாட்டினால் சிறுமி ஒருவர் மன ரீதியாகப் பாதிக்கப்பட்ட வழக்கில், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) மற்றும் யூடியூப் (YouTube) ஆகிய நிறுவனங்கள் குற்றவாளிகள் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
3 மில்லியன் டொலர்கள் இழப்பீடு
Kaley என்ற 20 வயது இளம்பெண், தனது சிறுவயது முதல் இந்தத் தளங்களுக்கு அடிமையானதால் மன அழுத்தம் மற்றும் உடல் தோற்றம் குறித்த கவலை (Body Dysmorphia) போன்ற பாதிப்புகளுக்கு உள்ளானதாக வழக்குத் தொடர்ந்தார்.

இதனை விசாரித்த லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம், அவருக்கு 3 மில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இலாபம் ஈட்டும் நோக்கில் சிறுவர்களைக் கவரும் வகையிலும், அவர்களை அடிமையாக்கும் வகையிலும் இந்தத் தளங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஜூரிகள் கண்டறிந்துள்ளனர்.
("ஜூரிகள்" (Jurors) என்பது நீதிமன்ற விசாரணைகளில் தீர்ப்பு வழங்க உதவும் 'சாதாரண பொதுமக்களின் குழு' ஆகும்)
கூகுள் - மெட்டா அதிருப்தி
இந்த பாதிப்பிற்கு மெட்டா நிறுவனம் 70 வீதம் பொறுப்பு என்றும், யூடியூப் 30 வீதம் பொறுப்பு என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அடிப்படை இழப்பீடு தவிர, தண்டனைக்குரிய அபராதமாக (Punitive Damages) மேலும் 30 டொலர்கள் மில்லியன் வரை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், "இந்தத் தீர்ப்பில் எங்களுக்கு உடன்பாடில்லை, நாங்கள் மேல்முறையீடு செய்வோம்" என கூகுள் மற்றும் மெட்டா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சமூக வலைதள நிறுவனங்களுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான வழக்குகளுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு முன்னோடியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.