இலங்கையில் அதிகரித்து வரும் நோய் குறித்து வைத்தியர் கூறும் அதிர்ச்சி தகவல்
இலங்கையில் மனநோய்களால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சிறப்பு மனநல மருத்துவ சங்கத்தின் தலைவரும் வைத்தியருமான டபிள்யூ.ஏ.எல். விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டி சிறைச்சாலை வளாகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (09.05.2023) காலை நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்
மேலும் இவர் கூறியுள்ளதாவது, இலங்கையில் மனநோயாளிகள் வேகமாக அதிகரித்து வருவதற்கான காரணங்கள் குறித்தும் சிறப்பு ஆய்வு நடத்தினோம்.
தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியே இதற்கு முக்கிய காரணம் என்பது எமக்குத் தெளிவாகியது.
ஒரு நாட்டில் முடிவெடுக்கும் நபர்கள் சரியான மன ஒருமைப்பாடு இல்லாமல் செயல்படும்போது, நாடும் மக்களும் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். மன நெருக்கடிகள் அதில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
பிரச்சினைக்குரிய நிலை
நாட்டை ஆளும் மக்கள் எவ்வாறு மன ஒருமைப்பாடு இல்லாமல் செயற்படுகிறார்கள் என்பதற்கு இலங்கை அரசியலில் பல உதாரணங்களை கூறமுடியும்.
மேலும், தாங்கள் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது பலருக்குத் தெரியாது. நம் நாட்டு அரசியலில் இப்படிப்பட்டவர்கள் ஏராளம். முறையான சிகிச்சையை மேற்கொள்வதன் மூலம் குழப்பமான மனதைத் தெளிவுபடுத்தலாம்.
இது மிகவும் பிரச்சினைக்குரிய நிலை என்பதால் தேவையான ஆலோசனைகளை முறையாகப் பெறுவது மிகவும் முக்கியம் என்றும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.



