நாமலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் ஆளும்கட்சி உறுப்பினர்கள் - பதவி விலகத் தீர்மானம்
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் கீழ் உள்ள மேற்பார்வை உறுப்பினர் பதவிகளை ஏற்க வேண்டாம் என பலர் தீர்மானித்துள்ளனர்.
ஆளுங்கட்சியின் பல மூத்த உறுப்பினர்கள் இது தொடர்பில் முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதற்கமைய நாமல் ராஜபக்ஷவின் கீழ் உள்ள மேற்பார்வை உறுப்பினர் பதவிகளை நிராகரிப்பதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதென சிங்கள ஊடமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது வரையில் பதவி நிராகரிக்க தீர்மானித்துள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. எப்படியிருப்பினும் எதிர்வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் கீழ் 50 மேற்பார்வை உறுப்பினர்களை நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
நாமல் ராஜபக்ஷவுக்காக வர்த்தமானியிடப்பட்ட புதிய நிறுவனங்களின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள செயல்பாட்டுத் திட்டங்களை மேற்பார்வையிட 50 நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்க அரசாங்கத்தினால் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அதற்கமைய கடந்த இரண்டு நாட்களில் நாமல் ராஜபக்ச பல நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இது குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.