சுவிற்சர்லாந்திலுள்ள பல்சமய இல்லம் தொடர்பாக மன்னார் ஆயருடன் கலந்துரையாடல்
சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ன் நகரில் உள்ள “பல்சமய இல்லம்” (Haus der Religionen) உலகின் பல்வேறு மதங்களை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைக்கும் புதுமையான கட்டிடமாக கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக பண்பாட்டு இணக்கத்திற்கும் மதங்களிடைய உரையாடலுக்கும் முக்கிய தளமாக திகழ்கின்றது.
பேர்ன் நகரின் வடபகுதியிலிருந்து தெற்கே செல்லும் பயணிகளுக்குக் கண்ணில் பட்டுவிடக்கூடிய இந்த கட்டிடம், ஐரோப்பாவில் கூட அரிதாகக் காணப்படும் தனித்துவத்தை உடையது.
இந்த ஒரே கட்டிடத்தில் கருவறையில் தமிழ் வழிபாடு நடைபெறும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில், இசுலாமியப் பள்ளிவாசல், தேவாலயம், குர்திஷ்-அலெவிட் நடுவம், ஆறு வகையான புத்தமத வழிகளை இணைக்கும் நடுவம் ஆகியவை அடுத்தடுத்து அமைந்துள்ளன.
அதோடு யூத மதம், சிக் மதம் மற்றும் பஹாய் மதத்திற்கான சாளரங்களும் இங்கு உள்ளன. மக்கள் சந்திப்பு, உரையாடல் மற்றும் திருவிழாக்களுக்கு பொதுத் திடலும் உண்டு.
சமூகப் பணி
“பல்சமய இரவு” போன்ற நிகழ்வுகளின் போது இரண்டு முதல் மூன்று ஆயிரம் பேர் வரை இங்கு கூடுகின்றனர். இப் பல்சமய இல்லம் 14 டிசம்பர் 2014 அன்று திறந்து வைக்கப்பட்டது. அப்போது ஊடகங்கள் இதை “பேர்ன் நகரத்தின் புதுமை”, “புதிய காலக்கட்டத்தின் தொடக்கம்”, “மத அரசியலில் ஒரு புரட்சி” என உரைத்திருந்தன.

இப் பல்சய இல்லத்தின் உருவாக்கத்திற்கு பல முன்னோடியான முயற்சிகள் காரணமாகின. 1740 முதல் பேர்னில் இருந்த ஹேறென்கூற்ரெர் (Herrnhuter Gemeinde)“ சகோதரர் சமூகத்தினர் 1998 ஆம் ஆண்டு புதிய சமூகப் பணிக்கான நோக்கத்தைக் குறித்து சிந்தித்தனர்.
மதங்களுக்கு இடையிலான உரையாடல், குடியேற்றம் மற்றும் அமைதி பணிகள் முக்கிய கருப்பொருள்களாகத் தோன்றின.
17ஆம் நூற்றாண்டு செக் சிந்தனையாளர் யோஹான் அமோஸ் கோமேனியஸின் “அமைதிக்கான பணிகள்” என்ற கருத்து இங்கு வழிகாட்டியாக இருந்தது. அதே சமயம் 1990களின் தொடக்கத்தில் நடைபெற்ற வளைகுடா போர்களுக்குப் பிறகு பேர்னில் “மதங்களின் வட்டமேசை” உருவானது. இது பல மதத்தினரும் ஒன்றாக சந்தித்து உரையாட ஒரு தளமாக இருந்தது.
மேலும், பேர்ன் நகரத் திட்டமிடல் அலுவலகத்தின் ஆய்வில், குடியேற்ற மக்களால் வளர்ந்த ப்யூம்ப்லிஸ் பகுதியின் சமூக மாற்றங்கள் கவனிக்கப்பட்டன.
கலைக்கல்லூரி விரிவுரையாளர் கிறிஸ்தியன் ஜாக்குவெட், “பல்லினப் பல்பண்பாடுகளும் மதங்களும் ஒன்றிணையும் ஒரு இல்லம்” அந்தப் பகுதியின் முக்கியத்துவத்தை உயர்த்தும் என பரிந்துரைத்தார். இந்த மூன்று முயற்சிகளும் 2000ஆம் ஆண்டு நவம்பரில் ஒன்றிணைந்து “பல்சமய இல்லம்” என்ற யோசனையை முன்னெடுக்கத் தொடங்கின.
2002ஆம் ஆண்டு “Haus der Religionen - Dialog der Kulturen ” என்ற பல்சமய இல்லம் உருவானது. எட்டு உலக மதங்களைச் சேர்ந்தவர்கள் இதில் செயல்பட்டனர்.
அவர்கள் பல்வேறு பண்பாட்டு மற்றும் கல்வி நிகழ்ச்சிகளை 20 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இங்கு சை ஆயுர்வேத உணவகம் அமைந்துள்ளது. இதனை பல்சமய இல்லத்திற்காக ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர்களில் ஒருவரான சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் நடாத்தி வருகின்றார்.
தனிமனித முனைப்பு
இன்றைய உலகில் எந்த நகரமும் தனித்தனியாக வாழ முடியாது. பண்பாட்டு, பமய பல்வகைமை பாடசாலைகள், மருத்துவமனைகள், இறுதி சடங்கு நடுவங்கள் என அனைத்து துறைகளிலும் உரையாடல் தேவையாக அமைகின்றது.

பல்வகைமையை மோதலாக அல்ல, தன் அடையாளத்தைக் வாழ்ந்துகொண்டு மனிதர்களாக இணக்கமாக மாற்றும் நோக்கத்துடன் “பல்சமய இல்லம்” செயல்படுகிறது. இங்கு இசை, நடனம், நாடகம், காட்சிகள், கலந்துரையாடல்கள் மற்றும் வாழ்வியற் சடங்குகள் மூலம் மக்களுக்கிடையே நம்பிக்கையும் புரிதலும் உருவாக்கப்படுகின்றன.
இப்பல் சமய இல்லத்தில் அமைந்துள்ள பௌத்த தேரர்களில் வணக்கத்திற்குரிய பண்டே அனுருத்தவும் ஒருவராவார். இற்றைக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் இதேவகையில் ஒரு பல்சமய இல்லத்தினை இலங்கையில் அமைக்க முடியுமா என்ற வினாவுடன் இலங்கையில் பல்சமய இல்லத்தினை அமைக்கும் திட்டதினை சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமாரிடம் வினாவினார்.
அவரவர் சமய நம்பிக்கையுடன் - அடையாளத்துடன் ஒருவரை ஒருவர் மதிக்கும் வகையில் பல்சமய இல்லம் ஒன்று இலங்கையில் நிறுவும் முயற்சி எளிதான செயல் இல்லை என்பதை இவருவரும் அறிந்திருந்தனர். அதனைத் தாண்டி தனிமனித முனைப்பில் இலங்கையில் பல்சமய இல்லம் பல்லினப் பல்மக்கள் வாழும் புத்தளத்தில் நிறுவப்பட்டது.
இங்கு பரீட்சார்த்தமாக உரையாடல்கள் நடைபெற்று வருகின்றது. மூன்று சமயச் சார்பாளர்களும் இதில் பங்கெடுத்து வருகின்றனர். இலங்கையில் எதிர்கால பல்பண்பாட்டு சமூக வாழ்க்கைக்கான நம்பிக்கையின் அடையாளமாக இந்த இல்லம் விளங்க வேண்டும் எனும் வேண்டுகையுடன் எதிர்வரும் 07.02.2026 சனிக்கிழமை கொழும்பில் பல்மசயச் சார்பாளர்கள் பங்கெடுக்கும் பொதுக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய சந்திப்பு
பல்சமய ஒற்றுமையையும் சமூக இணக்கத்தையும் முன்னெடுக்க மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக, மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசத்தை 27. 01. 2026 அன்று சைவநெறிக்கூடத்தினர் நேரில் சென்று நடைபெறவுள்ள பல்சமய இல்லம் அமைத்தல் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு வழங்கப்பட்டது.

சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார், யாழ்ப்பாணம் இணுவில் திருக்கோவில் தலைமை அருட்சுனையர் செல்லத்துரை பிரசாத், சைவநெறிக்கூடம் இளையோர் மன்ற செயற்பாட்டாளர்கள் செல்வி இலட்சுமணன் லாவண்யா, மருத்துவர் யோகேஸ்வரன் லாவண்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்போது தமிழினமாக இணக்கத்துடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கக்கூடிய சமூக, மத மற்றும் பண்பாட்டு அடிப்படையிலான திட்டங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. மேலும், அமைக்கப்படவுள்ள பல்சமய இல்லத்தில் தமிழ்க் கத்தோலிக்கர்களின் பங்களிப்பும் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை சைவநெறிக்கூடம் சார்பில் முன்வைக்கப்பட்டது.
சந்திப்பின் நிறைவில், ஆயர் அவர்கள் அன்புடன் காலை உணவு விருந்தளித்தார். சைவநெறிக்கூடம் முன்னெடுக்கும் தமிழ் வழிபாட்டு முறமைனியனைப் பாராட்டினார். இலங்கையில் பல்சமய இல்லம் ஒன்றை நிறுவி செயல்படுத்துவது சவாலான முயற்சியாக இருந்தாலும், அதற்கான உளப்பாங்கும் திறந்த மனப்பான்மையும் சமயத் தலைவர்களிடையே உருவாக வேண்டும் என்பதில் அனைவரும் ஒருமித்த கருத்தை வெளியிட்டனர்.
திறந்த உள்ளத்துடன் உரையாடலை ஏற்றுக்கொண்ட மன்னார் ஆயர் அவர்கள் இந்த முயற்சிக்கு நம்பிக்கையூட்டுவதாக சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் தெரிவித்தார்.
இந்த முயற்சி மக்களின் இதயங்களை இணைப்பதையும், அனைவரையும் நிகர்மையாக (சமமாகக்) காணும் உளப்பான்மையை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. வேறுபாடுகளை மீறி புரிதலை வளர்ப்பதன் மூலம் நம்பிக்கையுடன் கூடிய இளைய சமூகத்தை உருவாக்க முடியும் என்பதே இச்சந்திப்பின் உட்கருத்தாக அமைந்தது.












சொத்து விஷயத்தில் குணசேகரன் அதிரடி, ஜனனியின் நிலை...எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
திடீரென பற்றியெரிந்த ஈரான் தலைநகர் - அமெரிக்காவை அச்சுறுத்தும் ஈரானின் ஸ்லீப்பர் செல்ஸ் News Lankasri