பாகிஸ்தான் - இலங்கைக்கு இடையில் சந்திப்பு
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான கடுமையான தீர்மானத்தின் போது, இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த பாகிஸ்தான் அரசாங்கத் தரப்புக்கும் இலங்கை அரசாங்கத் தரப்புக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரத்தில் இடம்பெற்றுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில மணித்தியாலங்களில் பாகிஸ்தானின் தேசிய தின நிகழ்வு பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன, வெளியுறவுச் செயலாளர் ஜயநாத் கொலம்பகே மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஸல் சுதர்சன பத்திரன ஆகியோர் பங்கேற்றனர்.
இதன்போது அவர்கள் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் வாக்கெடுப்பு தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
ஜெனீவா வாக்கெடுப்பின்போது இலங்கைக்கு தோல்வி ஏற்பட்டபோதும் பாகிஸ்தான் உட்பட்ட 11 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக, பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன.
