முடக்கப்பட்ட பகுதி மக்களுக்கு முதல்கட்டமாக 5000 ரூபா உலருணவு பொதிகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் முடக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்ற 11 கிராம அலுவலகர் பிரிவுகளையும் சேர்ந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முதல் கட்டமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5000 ரூபா பொருட்கள் வழங்குவதற்கான அனுமதி கிடைக்கப் பெற்று இருக்கின்றது என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கோவிட் நிலவரம் மற்றும் புயலின் தாக்கம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய நிலையில் 373 பேர் கோவிட் தொற்று உறுதியான நிலையில் இன்றும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் ஆகக் காணப்படுகின்றனர்.
இதனைவிட முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்புகளைப் பேணிய 633 குடும்பங்களைச் சேர்ந்த 2447 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள்.
மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்குரிய முதல்கட்ட கொடுப்பனவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளோம். இதற்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றிருக்கின்றது.
அதாவது குறிப்பாக மாவட்டத்தில் முடக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்ற 11 கிராம அலுவலர் பிரிவுகளையும் சேர்ந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முதல் கட்டமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5000 ரூபா பொருட்கள் வழங்குவதற்கான அனுமதி கிடைக்கப் பெற்று இருக்கின்றது.
மிக விரைவில் அவர்களுக்கான பொருட்களை அவர்களுடைய வீடுகளுக்குப் பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதனைவிட அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மனிதநேயம் கொண்ட நிறுவனங்கள் நிவாரணங்களை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் ஊடாக வழங்குகின்ற நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இருக்கின்றோம்.
சில இடங்களில் எங்களுக்குத் தெரியாமல் பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்களுக்குத் தெரியாமல் சிலர் நேரடியாக மக்களுக்கு சில நிவாரணங்களை வழங்கி வருகின்றார்கள். இது உண்மையிலேயே நிறுத்தப்பட வேண்டும். ஏனெனில் நாங்கள் ஒரு வழியின் ஊடாக செல்கின்ற போது அதனுடைய இரட்டிப்பு தன்மையைக் குறைத்துக் கொள்ள முடியும்.
எனவே இதனால் மக்களிடையே சில போட்டிகளும் ஏற்பட்டுத் தனிமைப்படுத்தி இருக்கின்ற பகுதிகளில் உள்ள மக்கள் கூட தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதை மறந்து நிவாரணம் கொடுக்கிறார்கள் என்பதற்காக மக்கள் ஒன்று கூடும் தன்மை காணப்படுகிறது. இது தொடர்பில் எங்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று இருக்கின்றது.
எனவே அரச சார்பற்ற நிறுவனங்களாக இருந்தாலும் சரி தன்னார்வ தொண்டு அமைப்புகள் ஆக இருந்தாலும் சரி நீங்கள் நிவாரணங்களை வழங்குவதாக இருந்தால் அல்லது அதற்குரிய விருப்பம் இருந்தால் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் ஊடாக மாவட்டச் செயலாளருக்குத் தெரியப்படுத்தி ஒரு ஒழுங்கு முறையின் ஊடாக ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் அந்த நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இவ்வாறு மக்களைக் குழப்புவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் அண்மையில் ஏற்பட்ட இந்த புயலினால் எமது பிரதேசத்திலே பலத்த காற்று வீசிய நிலையில் பல பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றது. அதன் அடிப்படையில் சில தற்காலிக வீடுகளும், சில நிரந்தர வீடுகளுமாக 18 வீடுகள் பகுதி சேதம் அடைந்து இருக்கின்றன.
அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஊடாக அதனுடைய அறிக்கைகள்
அமைச்சுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதற்கான அனுமதி கிடைத்ததும் அவர்களுக்கான
நஷ்டஈடுகளை வழங்குவதற்கும் நேரடியாக மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மதிப்பீடு
செய்து அந்த மதிப்பீட்டின்படி அவர்களுக்கான நஷ்டஈட்டை வழங்குவதற்கான
நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.