ஆலையடிவேம்பில் ஏக்கருக்கு 15 லீட்டர் டீசல் வழங்க நடவடிக்கை(Photo)
தேசிய மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய ஏக்கருக்கு 15 லீட்டர் டீசல் வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மகாபோக விவசாய செய்கை அறுவடையினை பாதுகாப்புடன் மேற்கொள்வது தொடர்பிலாக தீர்மானம் மேற்கொள்ளும் கூட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று(29) நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடல்
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் சுமார் 8500 ஏக்கர் வயல் நிலப்பரப்பில் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி அளவில் அறுவடை ஆரம்பமாகவுள்ளது. ஆகவே விவசாய அறுவடைக்கு தேவையான எரிபொருள் தொடர்பில் கவனம் செலுத்துவது மிக முக்கியமானது. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட செயலாளரிடம் தேவையான எரிபொருளை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளேன். அவரும் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.
அதற்கான முயற்சியை பிரதேச செயலாளர் எனும் அடிப்படையில் நான் முழுமையாக எடுத்துள்ளேன். அவ்வாறு கிடைத்தால் யாருக்கும் பிரச்சினை இல்லை.
ஆனாலும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக குறைவாகவோ அல்லது எரிபொருள் கிடைக்காமல் போனாலோ என்ன செய்வது என்பதுதான் இங்குள்ள கேள்வி. இதற்கான தீர்வு காணப்படவேண்டும் எனில் விவசாய பிரதிகள் ஒத்துழைப்பு அவசியம்” என கூறியுள்ளார்.
தீர்மானங்கள்
இதன் பின்னர் பலரது ஆலோசனைக்கு மத்தியில் கிடைக்கும் எரிபொருளில் அருகில் உள்ள பிரதேசங்களுக்கு ஏக்கருக்கு 12 லீட்டர் டீசலும் தூரப்பிரதேசங்களுக்கு ஏக்கருக்கு 12 லீட்டருடன் மேலதிகமாக 2 லீட்டர் விநியோகிப்பதற்கும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
மேலும் ஜூலை 1ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 10ஆம் திகதி வரை அறுவடை நடைபெறும் எனவும் இக்காலத்தில் கட்டம் கட்டமாக டீசல் டோக்கன் அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அறுவடை காலத்தில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டால் தகவல் அடிப்படையில் தேவைக்கு அதிகமான டீசலை பதுக்கி வைத்தவர்களிடம் இருந்து அவற்றை கைப்பற்றி அறுவடைக்கு வழங்குவது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளர் வி.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், அக்கரைப்பற்று கிழக்கு விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர், இராணுவ அதிகாரிகள்,
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் எரிபொருள்
நிரப்பு நிலைய உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.