வட்டுவாகல் பகுதியில் கடற்படை தளத்திற்கு முன்பாக இரகசியமான முறையில் காணி அளவீடு - உரிமையாளர்கள் போராட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் பகுதியில் கடற்படை தளத்திற்கான காணி சுவீகரிப்பிற்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (17) கொழும்பில் இருந்து வருகை தந்த நில அளவை திணைக்கள அதிகாரிகளால் இரகசிய முறையில் காணி அளவீடு இடம்பெற்று வருவதை அறிந்த காணி உரிமையாளர்களில் சிலர் வட்டுவாகல் கடற்படை முகாமுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள 'கோட்டாபாய கடற்படை கப்பல் ' கடற்படை முகாமுக்காக 617 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நில அளவீட்டு நடவடிக்கை நேற்றைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிந்த காணி உரிமையாளர்கள் பலர் கடற்படை முகாமிற்கு முன்னால் ஒன்றுகூடி எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
இரகசியமான முறையில் காணி அளவீடு
இந்த நிலையில் நேற்றைய தினம் (17)முல்லைத்தீவில் உள்ள நில அளவையாளர் திணைக்களத்துக்கு சென்ற கடற்படையினர் கடற்படை வாகனத்தில் நில அளவை செய்வதற்காக நாட்டப்படும் நில அளவை கற்களை ஏற்றி சென்றுள்ளதை அறிந்த காணி உரிமையாளர்களில் சிலர் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரனோடு இணைந்து வட்டுவாகல் கடற்படை முகாமுக்கு முன்பாக காணி ஆக்கிரமிப்புக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் நிலங்களை கடந்த 13 வருடங்களாக ஆக்கிரமித்து பாரிய கடற்படை முகாம் ஒன்றினை அமைத்துள்ள கடற்படையினர் அந்த காணிகளை படை முகாமின் தேவைக்காக கடந்த சில வருடங்களாக நிரந்தரமாக சுவீகரிக்கும் பொருட்டு பல தடவைகள் நில அளவை திணைக்களத்தால் அளவீடு செய்ய எடுத்த முயற்சிகள் காணி உரிமையாளர்களான மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.
காணி எடுத்தற்சட்டம் (அத்தியாயம் 450) 05 ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் பிரகாரம் காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கட்டளை நிமித்தம் 2017ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வெளியாகிய வர்த்தமானியின் பிரகாரம் கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள 271.62 ஹெக்டெயர் விஸ்தீரனமுடைய காணி கையகப்படுத்தப்பட்டுள்ளது என வர்த்தமானி வெளியாகியிருந்ததோடு, காணி உரிமையாளர்களான மக்களை காணி ஆவணங்களோடு வருகைதந்து கடற்படை முகாமுக்கு காணியை வழங்க அளவீடுகளை செய்ய எல்லைகளை அடையாளம் காட்டுமாறு நில அளவை திணைக்களத்தால் பல தடவைகள் காணி உரிமையாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டு அளவீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட ஏற்பாடாகியிருந்தது.
இந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு தொடர்ச்சியாக மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தமையால் அளவீட்டு பணிகள் இடம்பெற்றிருக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று(16) அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளதாகவும் இதற்காக சிறப்பான நில அளவையாளர் குழு ஒன்று கொழும்பிலிருந்து முல்லைத்தீவுக்கு வருகை தரவுள்ளதாகவும் அறிந்த சில காணி உரிமையாளர்கள் அரசாங்கத்திற்கு காணியினை வழங்குவதற்கு எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.