தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு சிலை திறப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் நினைவுச்சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வுகள்
மாவை சேனாதிராஜாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டே இந்தச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி, யாழ். இந்திய துணைத் தூதர் சாய் முரளி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், ஞானமுத்து சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், பத்மநாதன் சத்தியலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை, மறுவன் புலவு சச்சிதானந்தம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், உறுப்பினர்கள், மாவை சேனாதிராசாவின் குடும்பத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.
நினைவுப் பேருரைகளைத் தொடர்ந்து மாவை சோ.சேனாதிராஜாவின் முதலாமாண்டு நினைவுமலர், பேராசிரியர் பாஞ்.இராமலிங்கம் எழுதிய 'ஈழ அண்ணல் சோ.மாவை சேனாதிராஜா' ஆகிய இரு நூல்களும் வெளியிடப்படவுள்ளன.
வடக்கு மாகாண ஆளுநர்
இதேவேளை, மேடை நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கூறுகையில்,
மாவை.சேனாதிராசா அவர்களை எனக்கு எனது 10 வயதிலிருந்தே தெரியும். அவர் எனது தந்தையாரைச் சந்திப்பதற்காக அடிக்கடி எமது வீட்டுக்கு வருவார். நாங்கள் உயர்தரம் படித்துக் கொண்டிருந்த காலத்தில், எங்களைப் போன்ற இளையோருக்கு அரசியல் வகுப்புகளை நடத்திய ஆசானாகவும் அவர் திகழ்ந்தார்.
மேலும், நான் பிரதேச செயலாளராகவும், பின்னர் மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றிய காலங்களில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். அதிகாரத்தில் இருந்தாலும் அவர் மிகவும் எளிமையானவராகவே வாழ்ந்தார். அவரை எந்த நேரத்திலும், எவரும் இலகுவாகச் சந்திக்க முடியும் என்ற நிலை இருந்தது. அவர் பதவி ஆசை இல்லாதவர். சலுகைகளுக்கு ஒருபோதும் விலைபோகாதவர்.

தனக்காகவோ, தன் குடும்பத்துக்காகவோ எந்தவொரு சலுகையையும் அவர் எதிர்பார்த்ததில்லை. இன்றைய அரசியல் சூழலில் அவர் மிக வித்தியாசமான ஒரு மனிதராகவே வாழ்ந்து மறைந்துள்ளார். அவர் ஒரு அப்பாவியான மனிதர். அவரிடம் உதவி கேட்டு வரும் யாருக்கும் 'மாட்டேன்' என்று சொல்லும் துணிவு அவருக்கு இருந்ததில்லை.
அவரிடமிருந்து எப்போதும் எதிர்மறையான பதில்கள் வராது. அந்தளவுக்கு அவர் மென்மையான உள்ளம் கொண்டவர். தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தனது இளமைக் காலத்தைத் தியாகம் செய்து, பல வருடங்கள் சிறையில் வாடியவர். இப்படியொர் சிறந்த தலைவரை இழந்தமை எமது சமூகத்துக்குப் பேரிழப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல் - தீபன்
