மாவைதான் முதலமைச்சர் வேட்பாளர்! - சிறீதரன் எம்.பி வெளியிட்ட தகவல்
வடமாகாண சபை தேர்தல் இடம்பெறுமாக இருந்தால் மாவை சேனாதிராஜாதான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவார் என இலங்கை தமிழரசு கட்சி அறிவித்துள்ளது.
அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“தேர்தல் அறிவிக்கப்படுமாக இருந்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம். அதற்கான ஏற்பாடுகளுடன் நாங்கள் தயாராக இருக்கின்றோம். மாவை சேனாதிராஜாதான் எங்கள் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவார்.
அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதனையும் கூறியுள்ளேன். முதலில் வெளியிலிருந்து புலமையாளர்களை நாங்கள் கொண்டுவந்தோம். அவர்கள் வெளியிலிருந்து வந்து அரசியலை படித்து இந்த விடயங்களை கையில் எடுத்து நடத்துவதற்கு நீண்ட நாட்கள் ஆகின்றன.
அதற்குள் ஐந்து ஆண்டுகள் முடிந்துவிடுகின்றன. ஆகையினால் முதலமைச்சராக இருக்க வேண்டியவர் ஒர் அரசியல் தலைவர் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இது தொடர்பில் கட்சிக்குள் முழு ஐக்கியப்பாடு இருக்கின்றது.
மாவை சேனாதிராஜாவை தெரிவு செய்வதற்கு கட்சிக்குள் ஒருமித்த நிலைப்பாடு முழுமையாக இருக்கின்றது. கூட்டமைப்பிற்குள் இருக்கின்ற அனைவரும் மாவை சேனாதிராஜாவிற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிட்டு சொல்லக்கூடிய விடயமாகும்.
இந்நிலையில், மாவை சேனாதிராஜாதான் தமிழரசு கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.