வெளிநாட்டு ஆசைக்காட்டி இளைஞர் யுவதிகளிடம் பாரிய அளவு பணம் கொள்ளை
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி இலங்கை இளைஞர், யுவதிகளிடம் பணம் கொள்ளையடிக்கும் முகவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
சுற்றுலா விசா மூலம் டுபாய் நாட்டிற்கு தொழிலுக்காக இளைஞர் யுவதிகளை அனுப்புவதாக வாக்குறுதியளிக்கப்பட்டு இந்த மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு டுபாய் நாட்டிற்கு செல்லும் இளைஞர்கள் யுவதிகள் தொழில் வாய்ப்பு கிடைக்காமல் இடை நடுவில் சிக்கி தவிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
டுபாயில் தொழில் பெற்றுத்தருவதாக 3 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு அந்த நாட்டிற்கு இளைஞர்களை அனுப்புவதற்கு ஏஜன்சி உரிமையாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். எனினும் டுபாயில் அவர் கூறியது போன்று தொழில் கிடைப்பதில்லை என தெரியவந்துள்ளது.
இவ்வாறான மோசடியில் சிக்கியவர்கள் ஏஜன்ஸியிடம் கேள்வி கேட்கும் போது உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் இந்த மோசடி தொடர்பில் முறைப்பாடு செய்த போது அவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.