வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மட்டக்களப்பில் முன்னெடுத்த கவனயீர்ப்புப் போராட்டம்
இலங்கையில் போர் முடிவடைந்த காலகட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்தக் கோரியும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் பலர் கலந்துகொண்டு தங்களது ஆதங்கங்களையும் கோரிக்கைகளையும் பதாகைகள் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்
இந்தப் போராட்டமானது மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி அ.அமலநாயகி தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிங்கள அரசு மற்றும் இராணுவத்திற்கு ஆதரவான, எம்மை ஏமாற்றும் உள்ளக நீதிப்பொறிமுறை எமக்கு வேண்டாம். சர்வதேச விசாரணையை கோருகின்றோம் என முதன்மைப் பதாகையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அத்துடன், இந்த விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
"போர் முடிவில் இராணுவத்திடம் சரணடைந்த எங்கள் குழந்தைகளுக்கு என்ன ஆனது?", மற்றும் இராணுவத்தை நம்பி சரணடைந்த பிள்ளைகள் எவ்வாறு காணாமல் போனார்கள் போன்ற கேள்விகள் எழுப்பப்பட்ட பதாகைகளை உறவினர்கள் கண்ணீருடன் ஏந்தியிருந்தனர்.
அரசாங்கத்தின் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் ஒரு கண் துடைப்பு நாடகம் என்றும், தங்களுக்கு சர்வதேச நீதி விசாரணையே தேவை என்றும் போராட்டக்காரர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை
நீண்ட காலமாகத் தொடரும் தங்களது நீதிக்கான போராட்டத்திற்கு முறையான தீர்வு கிடைக்க வேண்டும் என்றும், சர்வதேச சமூகம் இதில் தலையிட்டு தங்களுக்கு தகுந்த நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்கள அரசு மற்றும் இராணுவத்திற்கு ஆதரவான, தங்களை ஏமாற்றுகின்ற எந்தவொரு உள்ளக நீதிப்பொறிமுறையும் தங்களுக்குத் தேவையில்லை எனப் போராட்டக்காரர்கள் இதன் போது தெரிவித்துள்ளனர்.

சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையினை முன்வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களுக்கு நம்பகமான நீதி கிடைக்க வேண்டுமாயின், தமது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் காணாமலாக்கப்பட்டமை குறித்து ஒரு சர்வதேச விசாரணை மட்டுமே நடத்தப்பட வேண்டும் என இதன் போது வலியுறுத்தியுள்ளனர்.
போராட்டத்தின் போது, காணாமலாக்கப்பட்ட தங்களது பிள்ளைகளின் புகைப்படங்கள் மற்றும் அடையாள அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.








