ஜனாதிபதியின் தீர்மானத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி! இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்
நூற்றுக்கு நூறு வீதம் சேதனப் பசளையை மாத்திரம் பயன்படுத்தி பயிர் செய்யும் நாடு எதுவும் உலகில் இல்லை என ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
வெலிபென்ன பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிராமிய காலணி தயாரிப்பில் ஈடுபடும் நபர்களுக்கு உபகரணங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
உலகில் 68 நாடுகள் நூற்றுக்கு நூறு வீதம் சேதனப் பசளையை பயன்படுத்தி பயிர் செய்கையில் ஈடுபட முயற்சித்தாலும் அது தோல்வியடைந்தது.
இரசாயன பசளையை இறக்குமதி செய்வதை நிறுத்த ஜனாதிபதி தீர்மானித்தாலும் அதன் ஊடாக பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இலங்கைக்கு ஒரு வருடத்திற்கான இரசாயன பசளையை இறக்குமதி செய்ய 400 மில்லியன் டொலர் செலவாகின்றது. செலவாகும் இந்த நிதியை குறைப்பதற்காக இரசாயன பசளை இறக்குமதியை நிறுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்தார்.
எனினும் இறுதியில் இது மிகப் பெரிய நெருக்கடியை நோக்கி தள்ளியது. இவற்றுக்கு ஆலோசனை வழங்கிய புத்திஜீவிகளை தற்போது காண முடியவில்லை. இதற்கு ஆதரவாக பேசிய மருத்துவர்கள், பேராசிரியர்கள் இருந்தனர். இவர்கள் வழங்கிய ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி, இரசாயன பசளை இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்தினார்.
தற்போது உழவர்களுக்கு பயிர் செய்ய முடியாமல் போயுள்ளது. தேயிலை கொளுந்தை பறிக்க முடியாமல் போயுள்ளது. சர்வதேச தேயிலை சந்தையில் 5 வீதம் கட்டுப்பாடு எம்மிடம் இருந்தது. அதுவும் எமக்கு இல்லாமல் போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.