கொழும்பு பிரபல தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்ற மோசடி அம்பலம்! வெளியான புதிய தகவல்
கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்தவர்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் மோசடி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மோசடி சம்பவம் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.
பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் குடும்பங்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களை இலக்கு வைத்து சிறுநீரகங்களை பணத்திற்கு வாங்கி வேறு நபர்களுக்கு விற்பனை செய்யும் மோசடி இடம்பெற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
உறுப்பு மாற்று சத்திரசிகிச்சைகளை தற்காலிகமாக இடைநிறுத்தம்
இதன்படி, அந்த வைத்தியசாலையின் உறுப்பு மாற்று சத்திரசிகிச்சைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், விசாரணைகள் இன்று (25) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் ஆலோசனைக்கமைய விசாரணைகள் இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய, சிறுநீரக தானம் செய்பவர்கள் குழுவொன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறுநீரகக் கடத்தலுக்கு உதவிய பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பிலும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மோசடி விசாரணைப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்ட நாள் முதல் சுகயீன விடுமுறையில் பணிக்கு திரும்பவில்லை எனவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த அதிகாரி இதற்கு முன்னரும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோசடி விசாரணைப் பிரிவின் கடமைகளில் இருந்தும் அவரை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
போலியான சான்றிதழ்கள் தயாரிப்பு
இந்த சிறுநீரகக் கடத்தலின் பிரதான தரகராக மோதரை காஜிமாவத்தையைச் சேர்ந்த ஒருவரெனவும் தெரிய வந்துள்ளது.
நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழும் குடும்பங்களைத் தொடர்பு கொண்டு சிறுநீரகங்களைப் பெற்றுக் கொள்வதற்காக குறித்த நபர் வேறொரு தரகரால் அமர்த்தப்பட்டுள்ளதாகவும்,தலா பத்து இலட்சம் ரூபாவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கஜிமாவத்தை, தொட்டலங்கை மோதரை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த ஆறு பேரை குறித்த நபர் இணைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சிறுநீரகம் தானம் செய்யும் போது சம்பந்தப்பட்டவர்கள் கிராம உத்தியோகத்தர்களின் சான்றிதழ்களை பெற வேண்டியதன் பின்னணியில் வைத்தியசாலையின் ஒரு குழுவினர் போலியான சான்றிதழ்களை தயாரித்து வழங்கியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, தமக்கு சிறுநீரகத்திற்காக 120 முதல் 50 இலட்சம் ரூபா வரை பணம் வழங்கப்படுவதாக வாக்குறுதியளித்ததாகவும், இருப்பினும் கூறியது போன்று பணம் வழங்கப்படவில்லை எனவும் சிறுநீரகத்தை வழங்கியவர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.