கொழும்பில் பில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்த பெண்! பின்னணியில் வெளியான தகவல்
கொழும்பில் நிதி நிறுவனமொன்றில் பல கோடி ரூபா பணம் மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண் தொழிலதிபர் திலினி பிரியமாலி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு கோட்டையில் உள்ள உலக வர்த்தக நிலையத்தின் 34வது மாடியில் திட்ட முதலீட்டிற்காக குறித்த பெண் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த நிலையில், பணம் மோசடியில் சிக்கி கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
திலினி பிரியமாலியிடம் பணத்தை முதலீடு செய்தவர்களில் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், உயரதிகாரிகள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங்கள், சமூகத்தின் உயர்மட்டத்தைச் சேர்ந்த பிரபலங்கள் என பலதரப்பட்டவர்களும் உள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பில்லியன் கணக்கான மோசடி
இந்நிலையில், திலினி பிரியமாலியின் காதலனாக கருதப்படும் இசுரு பண்டாரவின் தொலைபேசி உரையாடல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த உரையாடல் தொடர்பில் இசுரு பண்டாரவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளமை போன்று தனது உரையாடல்கள் சிறைச்சாலைக்குள் இருந்து மேற்கொள்ளப்பட்டவை அல்ல எனவும் இசுரு பண்டார தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஒலிப்பதிவு மற்றும் உரையாடல் எந்தத் தொலைபேசியில் எப்போது இடம்பெற்றது என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.