நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிக்கண்ட போதிலும் அபிவிருத்தி திட்டங்கள் கைவிடப்படவில்லை : மருதபாண்டி ரமேஸ்வரன்
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிக்கண்ட போதிலும் நாட்டின் அபிவிருத்தி திட்டங்கள் கைவிடப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று (28) ஹட்டன் டிக்கோயா நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கோவிட் தொற்று காரணமாக முழு உலகமும் பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டாலும், இந்த நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) ஆகியோர் எந்த ஒரு அபிவிருத்தித் திட்டத்தினையும் கைவிடவில்லையென நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் நிதிச்செயலாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன் (Maruthapandi Rameswaran) தெரிவித்துள்ளார்.
நாட்டினுடைய பொருளாதாரத்தினை உயர்த்த வேண்டும் என்பதற்காக இந்த வருட வரவு செலவு திட்டத்திலும் பாரிய அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்காக இந்த வருட வரவு செலவு திட்டத்தில் நிதி அமைச்சர் பல மில்லியன் ரூபாய்களை ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தினை கிராம மட்டத்திலிருந்து கட்டியெழுப்புவதற்காக எதிர்காலத்தில் நாம் வெளிநாட்டினை நம்பியிருக்க கூடாது என்பதற்காகத்தான் அவ்வாறான ஒரு திட்டத்தினை முன்னெடுத்துள்ளார்.
அவ்வாறான ஒரு நிலையில் தான் இரண்டு வாரங்களுக்கு முன் பொகவந்தலா பகுதியில் பல மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை பெற்றுக்கொடுத்தோம். அதற்கு சமூர்த்தி அமைச்சின் ஊடாகவும் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் ஊடாகவும் நிதி பெற்றுக்கொடுக்கப்பட்டன.
இன்று பலர் விலைவாசிகள் சம்பந்தமாக சொல்கிறார்கள் நம் நாட்டில் மாத்திரம் விலைவாசி உயரவில்லை. மரக்கறி விலைவாசிகள் அதிகம் என்றும் உங்களுக்கு தெரியும் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் மரக்கறிகள் பாதிக்கப்பட்டன. இது நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டன. நுவரெலியா மாவட்டத்தில் உரம் இல்லாத பிரச்சினைகள் காணப்பட்டன அதனை நாங்கள் ஜனாதிபதியிடம் பேசி இப்போது தீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம்.
சிலர் உரம் இல்லை என்பதனை மரக்கறி விலை என்பதனையும் ஊடகங்களுடாக தெரிவித்தார்களே ஒழிய அவர்கள் அதற்காக எதுவும் செய்யவில்லை இன்று உங்களுக்கு தெரியும் நாடு பொருளாதார ரீதியாக பாரிய அளவில் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளது நாடு கொண்டு செல்வதற்கே சிக்கலான நிலையில் நாட்டு மக்களுக்காக பல்வேறு பணிகளை முன்னெடுத்துள்ளது எனவே அதனை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.