மன்னார் மாவட்டத்தில் கடும் மழை: பல கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியது (Photo)
பெய்துவரும் கடும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3501 குடும்பங்களைச் சேர்ந்த 12,350 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் (K.Dileep) தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகின்ற நிலையில் மாவட்டத்தில் தற்போது அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் தலைமன்னார், பேசாலை, தாள்வுபாடு, மன்னார் சாந்திபுரம், சௌத்பார், ஜிம்ரோன் நகர் உள்ளிட்ட மன்னார் நகர் பகுதிகளில் உள்ள பல கிராமங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மடுக்கரை உள்ளிட்ட சில கிராமங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் விடத்தல் தீவு, தேவன் பிட்டி உள்ளிட்ட கிராமங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விவசாய நிலங்களில் மழை வெள்ள நீர் சூழ்ந்து கொண்டு உள்ளமையினால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடற்கரையில் அமைந்துள்ள மீன் வாடிகள் சேதமாகி உள்ளதோடு, படகுகளும் சேதமடைந்துள்ளன.
மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் 3002 குடும்பங்களைச் சேர்ந்த 10,631 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 89 நபர்கள் இடம் பெயர்ந்து 2 தற்காலிக நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 325 குடும்பங்களைச் சேர்ந்த 1056 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 நபர்கள் இடம் பெயர்ந்த நிலையில் நலன்புரி நிலையம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 39 நபர்கள்களும், முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 166 குடும்பங்களைச் சேர்ந்த 628 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் மக்கள் இடம்பெயர வில்லை.
மாவட்டத்தில் தற்போது வரை 3501 குடும்பங்களைச் சேர்ந்த 12,350 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 105 நபர்கள் பாதிக்கப்பட்டு இடம்
பெயர்ந்து 3 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.













