இலங்கையில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!
கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று காலை 6 மணிமுதல் உடன அமுலாகும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கோவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதற்கமைய, கேகாலை, அம்பாறை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மாலை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் நாயாறு மீன்பிடித்துறை பகுதி, கேகாலை மாவட்டத்தின் கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிஹிபிட்டி கிராம சேவகர் பிரிவின் மாதெய்யாவ கிராமம், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை -3 கிராம சேவகர் பிரிவு ஆகிய பிரதேசங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, கேகாலை மாவட்டத்தின் ஹலமட மற்றும் குருணாகல் மாவட்டத்தின் இலுப்பு கெதர கிராம சேவகர் பிரிவின் விலோகொட கிராமம் என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன.
இதனிடையே, கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 563 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிக பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அதற்கமைய, இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 46,823 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.





