திருகோணமலையில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள பல பிரதேசங்கள்
திருகோணமலையில் நேற்று இரவு பெய்த அடை மழை காரணமாக பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (17) இரவு வேலையில் சுமார் நான்கு மணிநேரம் இடைவிடாது பெய்த அடைமழை காரணமாகத் திருகோணமலையின் பிரதான வீதிகள் மற்றும் சில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலையின் அலஸ் தோட்டம், செல்வநாயகபுரம், அன்புவலிபுரம், பழத்தோட்டம் மற்றும் திருகோணமலை கண்டி பிரதான வீதியின் மட்கோ சந்தி உட்படப் பல பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் சில குடும்பங்கள் அவர்களின் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு வெள்ளத்தில் மூழ்கிய பிரதேசங்கள் சரியான வடிகான் இல்லாமையினால் வீதிகளுக்கு மழைநீர் வந்ததாகவும் நகர்ப்புறங்களில் உள்ள வடிகான்கள் சரியான முறையில் பராமரிப்பு இல்லாமல் இவ்வாறு மக்கள் குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
மேலும் இவ்வாறு மழை நீரானது சரியான வடிகான்கள் இல்லாமையினால் மழை நீர் வடிந்தோடுவதற்கும் முடியாமல் ஆங்காங்கே மழைநீர் தேங்குவதாகவும் இதனால் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் இவ் பிரதான வடிகான்களை உடன் சுத்தம் செய்து மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகாமல் நடவடிக்கை எடுக்குமாறும் பிரதேச வாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.