கிழக்கு மாகாணத்தில் பல பிரதேசங்கள் தொடர்ந்து சிவப்பு வலயங்களாக அறிவிப்பு! - கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர்
கிழக்கு மாகாணத்தில் இதுவரை 2534 கோவிட்-19 தொற்றாளிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் 2278 பேர் சிகிச்சை பெற்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளதுடன், அம்பாறை, கல்முனை வடக்கு மற்றும் தெற்கு, தமண, திருகோணமலை, காத்தான்குடி ஆகிய பிரதேசங்கள் சிவப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகக் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 12 மணித்தியாலத்தில் தமண பிரதேசத்தில் 6 பேரும், தெய்யத்தகண்டி பிரதேசத்தில் 3 பேரும், காத்தான்குடி பிரதேசத்தில் 5 பேர் உட்பட 14 பேர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 486, மட்டக்களப்பு மாவட்டத்தில் 619, அம்பாறை 175, கல்முனை 1256 பேர் உட்பட 2534 பேர் தொற்று உறுதி கண்டறியப்பட்டதுடன் இதுவரை 16மரணங்கள் ஏற்பட்டுள்ளதுடன் 265 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இருந்த போதும் தொற்றின் தாக்கம் கிழக்கு மாகாணத்தை விட்டு அகலவில்லை.
எனவே மக்கள் தொடர்ந்து சுகாதார வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதனைக் கடைப்பிடிக்காத பட்சத்தில் மீண்டும் தொற்று ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும். தற்போது மக்களுடைய நடமாட்டம் மாகாணங்களுக்கிடையிலான எந்தவித கட்டுப்பாடுமின்றி இடம்பெறுகின்ற காரணத்தினால், தொற்றானது எந்தநேரத்திலும் வரக்கூடிய நிலையுள்ளது.
உலகில் தற்போதைய வைரசானது பல மாற்றங்களுக்குள்ளாகி அதன் தாக்கமும் அதனுடைய பரவுகின்ற வீதமும் உள்ளது என அடையாளம் காணப்பட்டுள்ளதால் அது இலங்கைக்கு வரக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது.
ஆகவே தொற்று அபாயம் இலங்கையிலிருந்து அகலும் வரை இதன் பாதிப்பு காணப்படும். கிழக்கு மாகாணத்தில் முதற்கட்டமாகக் கிழக்கு மாகாணத்திலுள்ள 46 சுகாதார அதிகாரிகள் பிரிவில் ஆதார வைத்தியசாலைகள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள வைத்தியசாலைகள் உள்ள சுகாதார ஊழியர்களும், அவர்களுடன் சார்ந்தவர்கள் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தில் 271 பேருக்கும், திருகோணமலை மாவட்டத்தில்1510 பேரும், கல்முனை 2418, அம்பாறை பிராந்தியத்தில் 1799 பேர் உட்பட 8503பேருக்கு இதுவரை தடுப்பூசி ஏற்றப்பட்டு வெற்றிகரமாக முடிவடைந்தது.
இதன் முதற்கட்டமாகத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டம் ஒரு மாதத்தின் பின்னர் ஏற்ற ஆரம்பிக்கப்படும், எது விதமான பக்கவிளைவுகளும் பிரச்சனையும் ஏற்படவில்லை.
இதேவேளை காத்தான்குடியில் தனிமைப்படுத்தல் என்பது பல கட்டங்களாக இடம்பெறுகின்றன. ஆரம்பத்தில் கோறளைப்பற்றுமத்தி, அக்கரைப்பற்று, கல்முனை, திருகோணமலையிலும் திடீரென காத்தான்குடி மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனையில் 50வீதமானவர்களுக்கு கொரோனா தொற்று அதிகளவில் அடையாளம் காணப்பட்டது.
அதன் பிற்பாடு நகரசபை தவிசாளர் மிகத் தெளிவாகக் காணொளி ஒன்றை வெளியிட்டார். காத்தான்குடியில் 50 வீதமானவர்களுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்றுள்ளதாகவும் சிலர், கொழும்பிலிருந்து ஏறாவூருக்கு வந்து அங்கிருந்து முச்சக்கரவண்டியில் காத்தான்குடிக்கு வருவதாகவும், அதேவேளை ஆரையம்பதியில் வந்து இறங்கி வருவதாகவும் போன்ற காணொளியை வெளியிட்டிருந்தார்.
ஆகவே அவருடைய கூற்றானது எங்களை மிகவும் யோசிக்க வைத்தது. அதன் பிற்பாடு சுகாதார அதிகாரிகள் கலந்தாலோசித்து பின்னர் காத்தான்குடி தனிமைப்படுத்தல் முக்கியமென அமைந்தது. அதற்கு நகரசபை தவிசாளருக்கு நன்றி கூற வேண்டும். அதன் பிற்பாடு அங்கு மேற்கொண்ட சோதனை நடவடிக்கைக்குப் பல இடங்களில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.
இருப்பினும் எங்களுடைய குறிக்கோள் அங்கிருக்கின்ற மக்களைத் தொற்றிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என மக்களின் நன்மை கருதி எங்களது சேவையைச் செய்துகொண்டிருக்கின்றோம்.
காத்தான்குடியில் 3 நாளில் 800க்கு மேற்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதாக திட்டமிட்டிருந்தோம். அதனடிப்படையில் கடந்த வியாழக்கிழமை 500 பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தோம். இதில் 7 பேர் தொற்றுள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
இதன் பிரகாரம் தொழில்நுட்ப குழுவினர் பரிசோதனையின் பின்னர் 9கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை விடுவிக்கப் பரிந்துரை செய்து இதனைச் சுகாதார திணைக்கள நாயகத்திற்கு அனுப்பியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்ல காத்தான்குடியில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. எனவே மக்கள் தங்களது வீடு சுற்றுச் சூழலைத் துப்பரவு செய்து டெங்கு நுளம்பை ஒழிக்க செயற்படுமாறு அவர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
