மாதாந்த கொடுப்பனவு பெருந்தோட்ட மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் - மனோ கணேசன் வலியுறுத்தல் (Video)
நலிந்த பிரிவு குடும்பங்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு பணத்தை பெருந்தோட்டங்களில் வாழும் குடும்பங்களுக்கும் வழங்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் நேரடியாக கூறியுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் ஆலோசனையுடன் குறைந்த வருமானம் பெரும் நலிந்த பிரிவு குடும்பங்களுக்கு மாதாந்தம் 14,000 ரூபாவை வங்கி கணக்குகள் மூலம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பொருளாதார சீர்திருத்தம் நிகழும் போது, மென்மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும் பிரிவினருக்கு இத்தகைய மாதாந்த நலன்புரி கொடுப்பனவு வழங்குவது சரியானது.
இது தொடர்பில் அரசாங்கத்தையும், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி பங்காளர்களையும் பாராட்டுகிறேன்.

ஆனால், இந்த நலன்புரி கொடுப்பனவு இலங்கையின் மிகவும் நாளாந்த பிரிவினரான பெருந்தோட்டங்களில் வாழும் குடும்பங்களுக்கும் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும்.
குறிப்பாக பதுளை, கண்டி, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, அவிசாவளை, களுத்துறை, மாத்தளை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களின் பெருந்தோட்ட குடும்பங்களை வழமைபோல் ஒதுக்கி விடுவதை நாம் இம்முறை ஏற்க போவதில்லை.
நாளாந்த சம்பளம் 1000 ரூபா ஆகவே மாதம் 25000 ரூபா என காகிதத்தில் கணக்கு எழுதி இம்மக்களை தவிர்க்க கூடாது.
மின்கட்டண பட்டியலின்படி தெரிவுசெய்யப்பட வேண்டும்
அதேபோல், பெருந்தோட்ட பிரதேசத்தில் தோட்டங்களில் வேலை செய்யாதோரும் வாழ்கிறார்கள். அவர்களும் குறைந்த வருமானம் பெரும் நலிந்த பிரிவினரே. அவர்களுக்கும் இந்த மாதாந்த நலன்புரி கொடுப்பனவு கிடைக்க வேண்டும்.
எனது ஆலோசனையின் படி மாதாந்த மின்சார கட்டண பட்டியலில் 1 முதல் 90 வரை அலகுகளை பயன்படுத்துகின்ற குடும்பங்கள், குறைந்த வருமானம் பெரும் நலிந்த பிரிவினராக கருதப்படலாம்.
அப்படியானால் அரசியல் தலையீடு இல்லாமல் நியாயமான ஏழை குடும்பங்களுக்கு நலன்புரி கொடுப்பனவு கிடைக்க வழி ஏற்படும்.
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகிய இலங்கையின் அபிவிருத்தி பங்காளர்களின் வழிகாட்டலில் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் இந்த மாதாந்த நலன்புரி கொடுப்பனவை நலிந்த பிரிவு குடும்பங்களுக்கு கொடுக்க முடிவு செய்து இப்போது, உதவி பெறக்கூடிய குடும்பங்களின் பெயர் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.
பெருந்தோட்ட மக்களுக்கு நியாமான வாய்ப்பு இல்லை
இவற்றை மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் செய்கிறார்கள். இதற்கு பொறுப்பாக நலன்புரி நன்மைகள் சபை செயற்படுகிறது.
சமூக பாதுகாப்பு சட்டமூலம் (Social Security Bill) விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளது. சமுர்த்தி கொடுப்பனவுகளில் பெருந்தோட்ட மக்களுக்கு நியாமான வாய்ப்பு இல்லை.
அதேநிலைமை இதிலும் ஏற்பட்டுவிடக்கூடாது. இன்று இருக்கும் சமுர்த்தி பட்டியலில் உதவி பெற தகுதி அற்றவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. எனினும் அரசியல் காரணமாக அவை நடக்கின்றன.
ஆனால், இந்நாட்டில் எல்லா கணிப்பீடுகளிலும் உணவின்மை, வறுமை ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய மக்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பெருந்தோட்ட குடும்பங்களுக்கு உரிய உதவிகள் கிடைப்பதில்லை. அது இம்முறை நடந்து விடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam