முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கு மனோ கணேசன் கண்டனம்
தெற்கில் கிளர்ச்சிகளின் போது கொல்லப்பட்ட சிங்கள மக்களின் நினைவாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள தூபிகளைப் போன்று, போரில் மாண்ட தமிழ் மக்களின் நினைவாக நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இலங்கை இராணுவ சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது நொறுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டவட்டமான மானங்கெட்ட செய்கையை நாம் கண்டிக்கின்றோம். அத்துடன், மாண்டவர்களை நிந்திக்கும் இந்த அநாகரிக செயலை கண்டிக்கும்படி சிங்கள முற்போக்குக் சக்திகளையும், பெளத்த சமூக தலைவர்களையும் நாம் அழைக்கின்றோம் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள மனோ கணேசன், இது பற்றி மேலும் கூறியுள்ளதாவது,
கோவிட் நோய் ஒழிப்பில் தோல்வி, துறைமுக நகர் சீனாவுக்கு தாரைவார்ப்பு ஆகிய நாட்டின் உண்மையான தேசிய பிரச்சினைகளை சிங்கள மக்களின் கவனத்துக்கு வராமல் தடுக்க, அவ்வப்போது தமிழ், முஸ்லிம் மக்களின் மீது இனவாதம் காட்டி தேசிய கவனத்தை வேறு பக்கம் கொண்டு போகும் அரசின் நீண்டநாள் தந்திர அரசியல் ஒரு மானங்கெட்ட அரசியல் பிழைப்பு என்பதை, அரசின் உள்ளே இருக்கும் தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எடுத்துக்கூற வேண்டும்.
இந்தத் திட்டவட்டமான மானங்கெட்ட செய்கையை நாம் கண்டிக்கின்றோம். அத்துடன், மாண்டவர்களை நிந்திக்கும் இந்த அநாகரிக செயலை கண்டிக்கும்படி சிங்கள முற்போக்கு சக்திகளையும், பெளத்த சமூக தலைவர்களையும் நாம் அழைக்கின்றோம்.
தெற்கில் 1971, 1989 கிளர்ச்சிகளின்போது கொல்லப்பட்ட சிங்கள மக்களின் நினைவாக தூபிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, போரில் மாண்ட தமிழ் மக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி நிர்மாணிக்கப்பட்டது.
இது இன்று இலங்கை இராணுவ சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது நொறுக்கப்படுகின்றது. ஆகவே, மாண்டவர்களை நிந்திக்கும் இத்தகைய அநாகரிக செயல்களைக் கண்டிக்காமல், சிங்கள முற்போக்கு சக்திகளும், பெளத்த சமூக தலைவர்களும் தொடர்ந்தும் மௌனமாக இருக்க முடியாது.
அதேபோல் மாண்டுபோன தமிழ் மக்களை நேரடியாகக் குறி வைத்து அவமானப்படுத்தும் இந்த
நடவடிக்கையை, தமிழ், முஸ்லிம் உறவை விரும்பும் அனைத்து தமிழ் பேசும் முஸ்லிம்
அரசியல் தலைவர்களும், கட்சிகளும் கண்டிக்க வேண்டும் என்றுள்ளது.