ரிஷாத் கைதுக்கு மனோ கண்டனம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கைதுக்கு எதிராகத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்காகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று நள்ளிரவில் அவரது இல்லத்தைச் சுற்றிவளைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே மனோ கணேசன் இதற்கான கண்டனத்தைத் தனது முகநூல் பதிவு மூலம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான அவரின் முகநூல் பதிவில்,
"நாடாளுமன்ற உறுப்பினர், கட்சித் தலைவர் ரிஷாத் பதியுதீனை இந்த ரமழான்
மாதத்தில் அதிகாலை 3 மணிக்கு வீடு புகுந்து, தலைமறைவாக வாழும் பாதாள உலகக்
கேடியை இழுத்துச் செல்வதைப் போல் கைது செய்ததன் பின்னுள்ள ஆவேசம் என்ன?
ராஜபக்ச அரசின் கொடூர இராணுவ முகம் வெளிப்படுகின்றதா?" என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.