மன்னார் காற்றாலை விவகாரம் குறித்து ஜனாதிபதிக்கு அவசர கடிதம்
மக்களுடைய வாழ்வியல் உரிமைகளை புரிந்து கொள்ளாமல் காவல்துறையும், அதிகாரிகளும் நடந்து கொள்வது என்பது அடிப்படை உரிமையை மீறு வதுடன் ஜனநாயக ஆட்சிக்கு உரித்துடைய இல்லை என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க விற்கு இன்று (சனிக்கிழமை) அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், "கடந்த பல வருடங்களாக காற்றாலை கனிம மண் அகழ்வுக்கு எதிராக ஜனநாயகப் போராட்டம் நடாத்தி வருகிறோம்.
அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் அமைச்சர்களுடனான கலந்துரையாடலும் பின்னர் தங்களுடனான உரையாடலும் நடைபெற்றன. அதன் விளைவாக ஒரு மாத காலம் பணிகள் இடை நிறுத்தப்பட்டன.
பாதிக்கப்பட்ட பொதுமக்கள்
பின்னர் துறை சார்ந்த அதிகாரிகள் குழு பொது அமைப்புகளுடனும், வலுச்சக்தி அமைச்சர் தலைமையிலான குழுவினர் பாதிக்கப்பட்ட பொது மக்களுடனும் கலந்துரையாடல் நடத்தியிருந்தனர்.

இக்கூட்டங்களில் மக்கள் தமது எதிர்ப்புணர்வை கூட்டாக வெளிப் படுத்தியிருந்தனர். அந்த மக்களின் உணர்வுகளையும் பாதிப்பின் வலிகளையும் அனுபவரீதியாக எடுத்துரைத்தும் பயனளிக்கவில்லை. மக்களினுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக தாங்களே தீர்மானத்தை எடுத்திருப்பது ஜனநாயக முறைமைக்கு உகந்ததல்ல.
வாதங்கள் என்பது இருதரப்பு பகிர்வு ஊடாக முரண்பாடுகளை களைந்து குறைந்தபட்ச விட்டுக் கொடுப்புடனாவது தீர்மானத்துக்கு வருவது தான் இருதரப்பினரும் ஒருசேர நிலைப்பாட்டுக்கு வருவது என்பதே சனநாயகப் பண்பியல்பாகும். இது நீதிமன்ற தீர்ப்பு போல் உள்ளது. அரச இயந்திரம் என்பது ஆட்சி மாற்றத்திற்கு பின்னும் காட்சி மாறவில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது.
எமது மக்களுடைய வாழ்வியல் உரிமைகளை புரிந்து கொள்ளாமல் காவல்துறையும், அதிகாரிகளும் நடந்து கொள்வது என்பது அடிப்படை உரிமையை மீறுவதுடன் ஜனநாயக ஆட்சிக்கு உரித்துடையதல்ல. எனவே இறுதி முடிவு எடுப்பதற்கு முதல் எம்முடன் கலந்துரையாடி இருக்க வேண்டியது மக்களாட்சித் தத்துவத்தின் இலக்கணமாய் இருக்க வேண்டும் என்பதே மரபாகும்.
மீள் பரிசீலனை
ஆகவே கனிம மண் அகழ்வு திட்டத்தை நிறுத்துவது தொடர்பாக எந்த விதமான அறிவித்தலும் இதுவரை வெளியிடப்படவில்லை. கனிம மண் அகழ்வில் ஈடுபடவுள்ள இரண்டு நிறுவனங்களும் வழமையான பணிகளை முன்னெடுத்து வருகின்றன. மன்னார் மக்களின் கோபமும், வலியும் நியாயமானது என்பதை புரிந்து கொள்ள தவறுகிறீர்கள் என்பது கவலையளிக்கின்றது.

இச்செயல் ஜனநாயக ஆட்சி அதிகாரத்தின் சட்டவாக்க கோட்பாடு, மக்களாட்சி தத்துவத்தை மீறும் செயலாகும். இது கடந்த கால ஆட்சியாளர்களுக்கும் தங்களுக்கும் வேறுபாடற்ற நிலை காணப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் உணர்கிறார்கள். அந்த உணர்வு தங்கள் மீதான இடதுசாரித்துவ பார்வையை கேள்விக்குட்படுத்துவதாகவே எமக்கு புலப்படுகிறது.
பரிகாரத்துக்கு முதல் சமூக சமநீதி அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம். மனிதனின் நிம்மதியான வாழ்க்கை சீர் கெடும்போது இருப்பியல் முறைமை சிதைவடைந்து விடும் என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் என்பது வேதனைக்குரியது.
ஆகவே ஒரு தரப்பாக வாதங்களின் அடிப்படையில் தீர்மானம் எடுப்பது ஏற்புடையதல்ல. அதை மீள் பரிசீலனை செய்து மீண்டும் எம்முடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்திற்கு வர வேண்டு மென தங்களிடம் அவசரமாகவும் அவசியமாகவும் கேட்டுக்கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri