மன்னார் அட்டை கடற்றொழிலாளர்களுக்கு அறிமுகமாக்கப்பட்ட புதிய சட்டம்
மன்னார் மாவட்டத்தில் உள்ள அட்டை தொழில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் ஒரு முறை தொழிலுக்கு சென்றால் 150 அட்டைகளை மாத்திரமே எண்ணிப் பிடிக்க வேண்டும் என்ற புதிய சட்டம் ஒன்றை மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு கடிதம் மூலம் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் செயலாளர் நாயகம் கஹவத்த அறிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் அரசாங்கமும் கடற்றொழில் அமைச்சும் அட்டை வளர்ப்பு, அட்டை ஏற்றுமதி, அட்டை பிடி, உட்பட அட்டை உற்பத்தியுடன் தொடர்பு பட்ட கடற்றொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகள், மானியங்களை வழங்கி வருகின்ற நிலையில் மன்னார் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் புதிய சட்டத்தை நடை முறைப்படுத்துமாறு கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
நீரியல் வள திணைக்களத்திற்கு கடிதம்
மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை கடிதத்தின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் அட்டை பிடிப்பதற்கான அனுமதி பத்திரத்துடன் கடற்றொழிலுக்கு செல்லும் கடற்றொழிலாளர் ஒருவர் அதிகபட்சமாக 150 அட்டைகளை மாத்திரமே பிடிக்க முடியும் எனவும் scuba diving க்கான அனுமதி பத்திரம் வைத்திருக்கும் கடற்றொழிலாளர் 250 அட்டைகளை மாத்திரமே பிடிக்க முடியும் எனவும் குறித்த விடயத்தை நடைமுறைப்படுத்துமாறு குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் அட்டை பிடி அனுமதியை முன்னதாகவே பெற்ற அனைவரது அனுமதி பத்திரத்தையும் இரத்து செய்யுமாறும் தன்னால் அனுப்பப்பட்ட புதிய நிபந்தனைகளின் அடிப்படையில் அனைவருக்கு மீள் அனுமதி பத்திரம் வழங்குமாறு பணித்துள்ளார்.
குறித்த கடிதம் வெறுமனே இலங்கை கடற்படை தலைமையகம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்படை தலைமையகத்துக்கு மாத்திரமே பிரதி யிடப்பட்டுள்ள நிலையில் கடற்றொழிலாளர்கள் பல்வேறு ஆதங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
புதிய சட்டம்
புதிய சட்டம் கடற்றொழில் நீரியல் வள அமைச்சருக்கு கூட தெரியாத நிலையே காணப்படுகிறது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது இந்த கடிதத்தில் உண்மை தன்மை இல்லை என்றும் இவை சில ஊடகங்களால் திட்டமிடப்பட்டு பரப்பப்படும் பிரசாரம் எனவும் இது தொடர்பில் தான் பரிசீலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்த நிலையில் மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் நேற்றைய தினம் புதிய நிபந்தனைகளின் அடிப்படையில் அனைவரும் செயல்படும் முகமாக புதிய அனுமதி பத்திரங்களை பெறுமாறு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் இன்றைய தினம்(18.10.2023) செளத்பார் பகுதியில் அட்டை பிடிப்பதற்கு முன்னர் வழங்கப்பட்ட அனுமதி பத்திரத்துடன் சென்றவர்களுக்கு கடற்படை பல்வேறு அசெளகரியங்களை ஏற்படுத்தியுள்ளதாக கடற்றொழிளாலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.





